கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Friday 2 September 2011

திருநாவுக்கரசர் தேவாரம் 5ம்திருமுறை - கோயில்


பாடல் எண் : 1

அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

பொழிப்புரை :

பேரின்பவீடு நல்கும் தில்லைத்
 திருச்சிற்றம்பலம் பொன்னுலக
 வாழ்வையும் தரும்.இத்தகைய
 திருச்சிற்றம்பலத்தை மேலும்
 இந்நிலவுலகில் என்அன்பு
 பெருகும் வகையில் கண்டு
பரமுத்திப் பேரின்ப நிலையை
 எளிதின் எய்துதற்கு இந்த நல்ல
 மனிதப் பிறவியை இன்னும்
 கொடுக்குமோ முதல்வன் ?

குறிப்புரை :

அன்னம் - வீட்டின்பம் .பாதகமே
 சோறு பற்றினவா தோணோக்கம் `
 என்னும் திருவாசகத்தில் சோறு
 என்பது பேரின்பம் என்னும் பொருள்
 பயத்தல் காண்க . கடவுளை அன்னம்
 ( அமுதம் ) என்னும் சொல்லால்
 குறித்தலுமுண்டு . தான் இறவாது
நின்று பிறர் இறப்பை நீக்குதலால் . `
பிழைத்த தன் தாதை தாளைப் பெருங்
கொடு மழுவால் வீசக் குழைத்ததோர்
 அமுதம் ஈந்தார் ` என்னும் தேவாரத்
 திருப்பாடலில் அமுதம் என்ற சொல்
 வீடுபேறு என்னும் பொருள் பயக்கு
மாறறிக . இனி , தில்லையில் இன்றும்
 பாவாடை நிவேதனம் உண்டு . பண்டு
 இது மிகப்பெரியளவில் நிகழ்ந்திருக்
கலாம் . அன்னம் பாலிக்கும் தில்லை
 என்பது அது குறித்ததுமாம் . சிறுமை -
 அம்பலம் சிற்றம்பலம் . பேரம்பலம்
 இருத்தலின் பிறிதின் இயைபு நீக்கிய
 அடைகொளியாகும் . சிதம்பரம் என்பது
 உணர்வு வெளி என்னும் பொருட்டு ;
 அஃது ஏனைய அம்பலங்களை நீக்கிய
தாதலின் அதுவும் அவ்வடைகொளியே .
 பொன்னம் - பொன்னுலக வாழ்க்கை .
 ஆகுபெயர் . பொன் எனலும் , பொன் -
 அம் எனப் பிரித்து உரைத்தலும் கூடும் .
 பொன் என்னும் நிலைமொழி வரு
மொழியொடு புணருங்கால் அம்முப்
பெறுதல் பெருவழக்கு . ` பொன்னஞ்
 சிலம்பிற் சிலம்பி `( தி .8 திருவெம்
பாவை 16.) ` பொன்னஞ் சிலம்பு `
 ( இறையனார் களவியல் மேற்கோள்
 சூ .18. 146) ` பொன்னங்கடுக்கை ` ( கந் .
 கலி . 93) ` ` பொன்னங் கமலம் `
( மீனாட்சி . பிள் . 24) ` பொன்னங்குழை `
( முத்து . பிள் . 394) ` பொன்னங்கொடி `
 ( முத்து . பிள் . 424) பொன்னஞ் . சிலை
` ( சிதம்பர . மும் . 542) ` பொன்னங்குவடு `
 ( சிந்தா - 2136) ` பொன்னப்பத்தம் என
 னகர ஈறு அக்குப் பெற்றது ` ` பொன்னங்
கட்டி ` என அம்முப்பெற்றது ( தொல் .
 எழுத்து . நச் . சூத் . 405). என் அன்பு எனப்
 பிரிக்க . அன்பு என்பது அம்பு என மரு
விற்று . தென்பு - தெம்பு . வன்பு - வம்பு .
 ( வீண்பு - வீம்பு .) காண்பு - காம்பு . பாண்பு -
 பாம்பு முதலிய சொற்களால் வல்லெ
ழுத்துக்கேற்ப மெல்லெழுத்துத் திரிதல்
 காண்க . என் நம்பு எனப் பிரித்து என்
 விருப்பம் எனலுமாம் . ` நம்பும் மேவும்
 நசையாகும்மே ` ( தொல்காப்பியம் சொல்
. 329.) ஆலித்தல் - விரித்தல் , பெருக்கல் ,
 களித்தல் , நிறைதல் ` ஆலிக்கும் அந்தணர்
 வாழ்கின்ற சிற்றம்பலம் ` ( தி .9 திருப்
பல்லாண்டு ) அகலல் என்பதன் மருவாகிய
 ஆலல் என்னும் தொழிற் பெயர் வேறு ;
 ஆலித்தல் என்னும் தொழிற்பெயர் வேறு .
` அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல
 அலர்ந்தன கதிர்களெல்லாம் ` ( தி .12 திருநாட்
 . 21.) ` ஆலிய முகிலின் கூட்டம் ` ( தி .12 திருநாட்
 . 24.) என்னம் எனக் கொண்டு எத்தன்மையனவும்
 என்றுரைத்தலும் பொருந்தும் . ` இன்னம் ... ...
 பிறவியே ` ` மனித்தப் பிறவியும் வேண்டுவதே
 இந்த மாநிலத்தே ` என்றார் முன்னும் . ( தி .4. ப .
8. பா .4.) உரை காண்க . பாலித்தல் - கொடுத்த
ருளல் . எல்லோரும் பிறவாமையை வேண்
டுதலாயிருக்க சுவாமிகள் திருக்கூத்தைக் காணும்
 பிறவியையே வேண்டினார் . அக்காட்சி கண்ட
 அளவானே , இவ்வுடம்பு உள்ளபோதே , பரமுத்திப்
 பேரானந்த அதீத நிலையை எய்தித் திளைக்க
 வைத்தலின் . தில்லைத் தரிசனம் பரமுத்தியான
ந்தத்தை இவ்வுடம்பு உள்ள போதே கொடுத்தலின் , 
அத்தரிசனத்திற்கு வாயிலாகிய பிறவியை மேலும்
 வேண்டுவாராயினர் .

பாடல் எண் : 2

அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.

பொழிப்புரை :

அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக்
 கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி ,
 கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை
 எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர்
 எம்பிரானை நீர் தொழுமின் .

குறிப்புரை :

வழிபாட்டுக்கு மலர் எடுக்குங்கால்
 அரும்புகளை நீக்கி மலர்களை மட்டும்
 பறித்தல்வேண்டும் என்பது விதி . ` அரும்
 போடு மலர் பறித்திட்டுண்ணா ஊரும் ... ...
 காடே ` ` அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு
 ஆர்வத்தை உள்ளே வைத்து ` என ஆசிரியரே
 அரும்புகளைப் பறித்து வழிபடுதலை
 உணர்த்தினார் . இது விதி விரோதமெனத்
 தோன்றும் . பூவினங்களுள் எல்லாவற்றின்
 அரும்புகளும் வழிபாட்டிற்காகா என்பதில்லை ;
 தாமரை முதலிய சிலவற்றின் அரும்பு ஆகும் .
 அரும்பு என்பது அடையின்றி நிற்குங்கால்
 தாமரை அரும்பிற்கே பொருந்துகிறது . `
அருப்பினார்முலை மங்கை பங்கினன் `
 ( தி .2. ப .25. பா .8.) ` அரும்புங் குரும்பையும்
 அலைத்த மென் கொங்கைக் கரும்பின் மொழியாள்
` ( தி .1. ப .46. பா .2.) ` அருப்புப் போல் முலையார்
` ( தி .5. ப .61. பா .5.) என்பவற்றால் அறிக . `
 அரும்பார்ந்தன மல்லிகை சண்பகம் ` ( தி .7. ப .13 .
 பா .4.) என்புழி ஏனைய அரும்புகளை உணர்த்தல்
 காண்க . ` வைகறை யுணர்ந்து போந்து புனல்
மூழ்கி வாயுங்கட்டி , மொய்மலர் நெருங்கு வாச
 நந்தன வனத்துமுன்னிக்கையினிற் றெரிந்து நல்ல
 கமழ் முகை யலரும் வேலைத் தெய்வநாயகற்குச்
சாத்துந் திருப்பள்ளித் தாமங் கொய்து `( தி .12 எறிபத்
 .9) என்றதால் போதுகளைக் கொய்தல் விதி
யென்பதும் அவற்றையே அரும்பு என்பதும்
 உணரக் கிடக்கின்றன . அறுதல் - அற்றம் .
 செறுதல் - செற்றம் . அற்றப்பட - நீக்கம் உற .
 ஆய் மலர் - வினைத்தொகை . அரும்புகளையும் ,
 அற்றப் பட ஆய்ந்த மலர்களையும் கொண்டு
 எனக்கூறலும் ஆம் . அற்றப் படுதல் ஆய்தற்கு
 அடையாய்க் குற்றம் நீங்கல் எனப் பொருள் தரும்
. ` விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் `
 எனும் குறளி (1186) லும் இப் பொருட்டாதலறிக .
 சுரும்பு - வண்டினங்களுள் ஒன்று . ` வண்டும்
 சுரும்பும் மூசும்தேனார் பூங்கோதாய் ` ( சிந்தா .
2065) கரும்பற்றச் சிலை :- அற்றம் - அழிவு .
 சோர்வு , துன்பம் , மெலிவு , சிலை - வில் .
 கரும்பு வில் காதலை விளைத்து இவற்றை
யெல்லாம் ஆக்குதலால் அற்றச்சிலை
 எனப்பட்டது . அற்றச்சிலை - அற்றத்தை உடைய
 சிலை என இரண்டன் உருபும் பயனும் உடன்
தொக்கதொகை எனக்கொண்டு தனக்கே அழிவு
 தந்த சிலையாதலின் கரும்பு அற்றச்சிலைக்காமன்
 என்றார் எனக்கூறலுமாம் . பெரும்பற்றப்புலியூர் -
 புலிக்கால் முனிவர்க்குப் பேரின்பத்தில் பெரும்
பற்றை விளைத்ததாலும் , அவர் வீடுபேற்றிற்
 பெரும் பற்றுடையராயிருந்ததாலும் , வணங்கும்
 எல்லா உயிர்க்கும் சிவனடி நீழலில் பெரும்பற்று
 விளைத்தலாலும் அப்பெயர் பெற்றது . அன்பினால்
 தூவுக ; தூவின் அவாவறுத்து வீடுபேறு எய்தலாம்
 என்னும் கருத்தைக் காமனைக் காய்ந்தவன் எனும்
 தொடர் குறிப்பிக்கின்றது .

பாடல் எண் : 3

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு
 எரிசூழ ( இடுகாட்டில் ) கிடந்தார் என்று
 அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை
 அடையுமுன்னரே நீவிர்போய்த்
 திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின் .

குறிப்புரை :

அரித்து சிரித்து என்பன முறையே அரிச்சு
 சிரிச்சு என மருவின . ` அரிச்சிராப்பகல் `
 எனத் தொடங்கும் திருக்குறுந் தொகையிலும்
 ( தி .5. ப .85. பா .3.) இவ்வாறு வருதல் காண்க .
 முதலும் மூன்றுமாம் அடிகளில் உற்ற
 என்னும் பெயரெச்சமும் உற்று என்னும்
 வினையெச்சமும் அமைந்தன . இரண்டா
மடியில் சுற்ற என்பது வினையெச்சம் .
 இப்பாடல் , இறக்கும்முன் பிறப்பை நீக்கிக்
 கொள்ளும் நெறியை உணர்த்துகின்றது .
 சிற்றம்பலம் அடைவார்க்கு வினையால்
 அரிப்புண்டலும் இறப்பொடு பிறப்பும்
 இல்லையாம் என்றபடி .

பாடல் எண் : 4

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.

பொழிப்புரை :

எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும்
 மேலைவல்வினையாகிய துவந்துவங்களும்
 எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன ? 
தில்லைமாநகரிலே திருக்கூத்தாடியருளும்
 திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாததொர்
 அடிமைபூண்ட எனக்கு அவ்வினைகள் ஒரு
 துன்பமும் செய்யவல்லன அல்ல .

குறிப்புரை :

அல்லல் - ஆகாமியமாகிய எதிர்வினை .
 அருவினை - நுகர்ந்தாலன்றித் தீர்த்தற்
கரிய பிராரத்தவினை . தொல்லை வல்
வினைத் தொந்தம் - பிராரத்த வினை
யநுபவம் உள்ள அளவும் உள்ள முயற்சி
யின் விளைவாய்ப் பருவத்தில் இன்ப
 துன்பங்களைப் பயக்கத்தக்க இருவினை
 எனப்படும் சஞ்சிதம் . துவந்துவம் -
 இரட்டை . நல்வினை தீவினை , அறம்
 மறம் , இன்பம் துன்பம் என்னும் இரட்டை
 களையும் அவைபோல்வனவற்றையும்
 வடமொழியில் துவந்துவம் என்பர் . அது
 தமிழில் தொந்தம் என்று வழங்குகிறது .
` என்புள்ளுருக்கி இருவினையை
 ஈடழித்துத் துன்பங்களைந்து துவந்துவங்
கள் தூய்மை செய்து முன்புள்ளவற்றை
 முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத்
 தில்லை ஆண்டானைக் கொண்டன்றே `
( தி .8 குலாப் .3) என்னும் திருவாசகத்தில்
 துவந்துவங்கள் தூய்மை செய்தல் சஞ்சித
 வினையையும் , இருவினையையும் ,
 ஈடழித்தல் ஆகாமியத்தையும் , துன்பங்க
ளைதல் பிராரத்தத்தையும் குறித்தல் காண்க .
 ` தொண்டன் ` என்பது பாடமாயின் , வல்
வினையாகிய அடிமை எனக்கொள்க . இரு
வினை இறைவன் ஆணையின் வரும் என்பது
 சாத்திரம் . பரமுத்தியிலும் ஆன்மா
 முதல்வனுக்கு அடிமையாதலின் ` எல்லையி
ல்லதோர் அடிமை ` என்றருளிச் செய்தார் . `
மீளா அடிமை ` ( தி .7. ப .95. பா .1) என்னும்
 நம்பியாரூரர் வாய்மொழியும் இக்கருத்தே
 பற்றி எழுந்தது .

பாடல் எண் : 5

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.

பொழிப்புரை :

உடம்பில் உயிர் உயிர்த்துக்கொண்டிருக்கும்
 காலமெல்லாம் நான் என்னை ஆளாக உடைய
 திருச்சிற்றம்பலவனாரை விளக்கமுறப்
பெற்றிருப்பேன் . இன்பத்தேன் விளங்கிய அத்
 திருச்சிற்றம்பலவனார் அடியேனைப் பேரின்ப
வீட்டில் நிலைபெற்றிருக்கவும் வைப்பர் .

குறிப்புரை :

ஊன் - உடல் . ஆகுபெயர் . நிலாவி - விளங்கி ,
 நிலை பெற்று . உயிர்க்கும் பொழுது - மூச்சு
விட்டுக்கொண்டிருக்கும் காலம் . நாதன் -
 உடையான் . தேன் - சிவானந்தம் . வான் -
 விண்ணுலகு அன்று ; சிவலோகம் . ஊனில்
 ஆவி என்றும் , ஊன் நிலாவி என்றும் பிரித்து
ரைக்கலாம் . வானிலாவி என்புழியும் அவ்வாறே
 கொள்ளலாம் . முதல்வன் திருவருளை மறவாத
வர்க்கே பேரின்பம் எய்தும் என்பது கருத்து .

பாடல் எண் : 6

சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.

பொழிப்புரை :

ஞானிகளும் தேவர்களும் போய்வேண்டும்
 வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்பு
டையது தில்லைச் சிற்றம்பலம் ; சிட்டர்க
ளாகிய அந்தணர்கள் வாழ்தற்கு இடமாவது
 அது . அத்தில்லைச் சிற்றம்பலத்தில்
 திருக்கூத்தாடியருளும் ஞான மூர்த்தியின்
 திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும்
 அச்சிட்டர்களாய மெய்ஞ்ஞானியரையே ,
 ஏனையோரைச் செறுதற்கு வல்ல காலன்
 அணுக மாட்டான் .

குறிப்புரை :

சிட்டர் - அறிவர் ; ஞானியர் ; தில்லை
வாழந்தணர் . சிட்டன் - ஞானமூர்த்தியாகிய
 நடராசப்பெருமான் . சிட்டன் , சிரேஷ்டன் ,
 சிஷ்டாசாரமுடையவன் என்பாரும் உளர் .

பாடல் எண் : 7

ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்
திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னாரிளை யார்விட முண்டவெம்
அருத்த னாரடி யாரை யறிவரே.

பொழிப்புரை :

தனிமுதற்பொருள் உலகங்களுக்கெல்லாம்
 ஒரே விளக்காய் உள்ளவர் ; செம்மையார் ;
 தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுபவர் ;
 முதியார் ; இளையார் ; நஞ்சுண்ட எம்செல்வர் ;
 அடியாரை அறிவார் .

குறிப்புரை :

ஒருத்தனார் - ஏகன் அநேகன் இறைவன்
 ( தி .1. ப .5.) உலகங்கட்கு ஒரு சுடர் - ` சுடர்
விட்டுளன் எங்கள் சோதி ` ( தி .3. ப .54. பா .5) `
சோதியே சுடரே சூழொளி விளக்கே ` ( தி .8
 திருவாச . அருட் . 1) ` சுடர்ச் சோதியுட்
 சோதியான் ` ( சம்பந் ) ` தூயநற் சோதியுட்
 சோதி ` ( தி .9 திருவிசைப் . 2.) ` உலக உயிர்க்
கெல்லாம் ஒருகண்ணே ` ( இருபா .20).
 திருத்தம் - செம்மை . திருத்தன் - செம்பொருள் .
 திருப்தி உடையவன் என்றலும் ஆம் . திருப்தி
 எண்குணங்களில் ஒன்று . தீர்த்தனுமாம் .
 உயிர்களைத் திருத்தி யாட்கொண்டவன்
 என்றலுமொன்று . ` திருத்தித் திருத்தி
 வந்தென் சிந்தையிடங்கொள் கயிலாயா `
 ( தி .7. ப .47. பா .8.) விருத்தனார் இளையார் - `
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்
குணர்ந்து ` ( தி .1. ப .52. பா .6.) அருத்தனார் -
 எமக்கு மெய்ப் பொருளாயுள்ளவர் . அருத்தம் -
 நீடுலகிற்பெறும் நிலையுடைய பெருஞ்செல்வம் .
 அடியாரை அறிவர் - ` அடியார் அடிமை அறிவாய்
 போற்றி ` ( தி .5. ப .30. பா .3.) 4,9 பார்க்க . ( தி . 5, ப .
13, பா . 10) பார்க்க . ( தி . 6. ப . 85. பா . 2.) பார்க்க .
 ( தி . 4. ப .23. பா .2.) பார்க்க .

பாடல் எண் : 8

விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுரு
எண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்
கண்நி றைந்த கடிபொழி லம்பலத்
துள்நி றைந்துநின் றாடு மொருவனே.

பொழிப்புரை :

யான் என்னும் செருக்கு மிகுந்த அயனும்
 மாலும் காண்டற்கு அரிதாய் , ஆகாயத்தை
யளாவியெழுந்த சோதிப்பிழம்பு ஒப்பற்ற
 பெருந்தலைவனாய் , தேனிறைந்த மணம்
 பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லை
யம்பலத்துள் திருச்சிற்றம்பல வடிவாய்
 நிறைந்து பஞ்சகிருத்திய நடனத்தைச்
 செய்யும் . தொழக்கல்லாதவர்களாகிய
 அயன்மாலுக்கு அரிய முதல்வன் அன்பால்
 வழிபட்ட வியாக்கிரர் , பதஞ்சலியார் என்னும்
 முனிவர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றித்
 தன்னியல்பை உணர்த்திப் பேரின்பம்
 அருளினன் என்றபடி .

குறிப்புரை :

இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை
 ( அப் . தி .5 ப .95) பார்க்க . ` விண்ணிறைந்து
 மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
 எண்ணிறந் தெல்லையிலாதானே ` ( தி .8
 திருவாச . சிவ .) எண் - எண்ணம் . கண்
 நிறைந்த - கள் நிறைந்த . ஞானமன்றில்
 ஆனந்தக் கூத்தாடுதலின் நிறைந்து நின்றாடும்
 என்றார் . சிவபிரானை ஒருவன் என்றல்
 உபநிடத வழக்கு . முழுமுதல் என்னுங்
 கருத்தை உடையது . ( வடமொழி சுலோகம் ) `
 ஒருவன் என்னும் ஒருவன் காண்க ` என்பது
 திருவாசகம் . ` ஒளிமணி வண்ணன் என்கோ ,
 ஒருவன் என்றேத்த நின்ற நளிர்மதிச் சடையன்
 என்கோ ` என நம்மாழ்வாரும் இக்கருத்தை
 வலியுறுத்துதல் காண்க . ` ஒருவனாய்
 உலகேத்த நின்ற நாளோ ` எனத் திருத்தாண்ட
கத்தினும் அருளிச்செய்வர் .

பாடல் எண் : 9

வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.

பொழிப்புரை :

மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர்
களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்த
ருளிய தில்லை நகரின் திசையை நோக்கிக்
 கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து
 அவர்களை விட்டு ஓடும் . இஃது உண்மை .

குறிப்புரை :

வில் - மேருவாகிய வில் . வட்டப்பட -
 அரைவட்டமாக அமைய . வாங்கி - வளைத்து .
 அவுணர் - திரிபுரத்தசுரர்கள் . வல்லை வட்டம்
 மதில் ; வல் - விரைவு . வட்டம் மதில் - வட்ட
 வடிவாயமைந்த கோட்டைகள் . ஒல்லை -
 விரைவு . வட்டம் - தொழுவாரைச் சூழ்ந்த இடம் .

பாடல் எண் : 10

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் முதல்வனைக்
 காண்பேம் எனத் தம்முள் எண்ணி
 முறையே நிலத்தை யகழ்ந்து தேடியும்
 வானிற் பறந்து திரிந்தும் காணவல்லாரல்லர் ;
 மாடமாளிகைகள் சூழ்ந்த திருத் தில்லையில்
 திருவம்பலத்தில் நின்று ஆடுகின்ற
 பெருமானது திருவடிகள் அன்பால் நினையும்
 என் நெஞ்சத்து விளங்கி இருக்கும் .

குறிப்புரை :

முதல்வனை அன்பால் அகத்தே நினைவார்
 அவனை உணரப் பெறுவர் என்பது கருத்து .

பாடல் எண் : 11

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம் பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

இனிய மொழிபேசும் பார்வதி அம்மையை
இடப்பாகத்தே வைத்தவன் ; இளைப்பின்றி
 உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கவல்ல
 சதுரப்பாடுடையவன் ; திருச்சிற்றம்பலத்தில்
 எழுந்தருளியுள்ளவன் . இப் பெருமான்
 எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும்
 திருக்கயிலாய மலையை அசையும்படி ,
 செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த
 இராவணனுடைய பத்து முடிகளும்
 வருந்தும்படி மெள்ள ஊன்றும் செம்மையான
 திருவடியைச் சென்று கை தொழுது உய்க .

குறிப்புரை :

மதுரம் - இனிமை . சர்வசங்கார காலத்துப்
 பெருமானது சினத்தைத் தணித்து மீண்டும்
 படைத்தற்றொழிலைச் செய்யவல்ல
 மொழியுடையாள் ஆதலின் ` மதுரவாய்மொழி மங்கை ` என்றார் . பங்கு - இடப்பாகம் . செம்பாதியும் கொண்டதையல் ( முத்துக் -. பிள்ளை . ) சதுரன் - சதுரப்பாடு உடையவன் . ` பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத இன்பம் , ஆவண்ணம் மெய்கொண்டவன் தன் வலியாணைதாங்கி , மூவண்ணல் தன் சந்நிதி முத்தொழில் செய்யவாளா மேவு அண்ணல் ` ( திருவிளையாடல் ) ஆதலின் சதுரன் என்றார் . திருமலை - கயிலைமலை . கோயில் என்பது சிதம்பரத்தைக் குறித்தலைப் போலத் திருமலை என்பது கயிலையைக் குறிக்கும் . அதிர - நடுக்கத்தால் அதிர்ச்சியடைய , ஆர்த்து - ஆணவத்தால் செருக்கி ஆர வாரித்து . மிதிகொள் சேவடி - மிதித்தலைக் கொண்ட எனவும் மிதித்து மீள அருள் செய்துகொண்ட எனவும் இருபொருள் பட நின்றது .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.