கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Wednesday 31 August 2011

நல்லூர்

http://www.nalluran.com/wp-content/uploads/2011/11/16.jpg

நல்லூர்

http://nalluran.com/images/2.jpg

புதன்கிழமை வாழ்த்துக்கள்


ரமதான் வாழ்த்துக்கள்

Tuesday 30 August 2011

Monday 29 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருமறைக்காடு

திருமறைக்காடு

பாடல் எண் : 1
சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி யரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ வவருடல் குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :
மந்தரமலையை மத்தாக நடுவே நிறுத்தி, சினம் மிக்க ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக்கொண்டு, விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்தகாலத்துக் கொல்லும் தன்மை வாய்ந்த ஆலகால விடம் அக்கடலில் தோன்ற, அதனால் தேவாசுரர்கள் அஞ்சி நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட அளவில் அந்நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவன் அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட மறைவனத்தில் எழுந்தருளிய பரமன் ஆவான்.

குறிப்புரை :
இது விடத்தைக்கண்டு விண்ணவர் எல்லாரும் நடு நடுங்க, அதனை நுகர்பவன் மறைக்காட்டுறையும் பரமன் என்கின்றது. சிலை - மந்தரமலை. சினம் மலி அரவு என்றது வாசுகி என்னும் பாம்பை. திவிதலம் - சுவர்க்கம். சலசல என்பது மத்தைக் கடையும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு. அவர் உடல் குலைதர - அத்தேவாசுரர்கள் உடல் நடுநடுங்க. மலைமலி மதில் - மலையை ஒத்த மதில். எல்லாத்தேவர் கட்கும் நடுக்கம் தந்த கடுவிடம் இவர்க்கமுதாயிற்று என்றது சிவனது அளவிலாற்றலையும் காக்கும் கருணையையும் விளக்கியது.

பாடல் எண் : 2

கரமுத லியவவ யவமவை கடுவிட வரவது கொடுவரு
வரன்முறை யணிதரு மவனடல் வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை யிமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :
கைகள் முதலிய அவயவங்களில், கொடிய விடம் பொருந்திய பாம்புகளைத் தொன்று தொட்டுவரும் வரன் முறைப்படி, வளை கேயூரம் முதலியனவாக அணி செய்து கொள்பவனும், கொலைத் தொழிலில் வல்லமை மிக்க புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்தவனுமாகிய பெருமான், இரவலர்களின் வறுமைத்துயர் போக எல்லோரும் நினைக்கும் தேவருலகம் அழகு பெற வளரும் கற்பகமரம் போன்ற கொடையாளர்கள் வாழும் மறைவனம் அமர்பரமன் ஆவான்.

குறிப்புரை :


இது கற்பகம் ஒத்த கொடையாளர்கள் பயில்கின்ற மறைக்காட்டுறையும் பரமனே எங்கும் அரவத்தை அணிந்து புலித்தோலாடை புனைந்து விளங்குபவன் என்கின்றது. இதனால் இறைவனது ஆடையும் அணியுங்கூறி அறிவித்தவாறு. கரம் - கை. கடு விட அரவு அது கொடு - கொடிய விடப்பாம்பைக் கொண்டு. வரன்முறையணிதரும் அவன் - முறையாக அவயவங்கட்கேற்றவாறு அணிபவன். அடல் வலி - கொல்லும் வன்மை. துயர்கெடுவகை நினைமனிதர்கள், இமையவர்புரம் எழில்பெற வளர் மரம் எனக்கூட்டுக. மரம் என்றது கற்பகத்தை.

பாடல் எண் : 3
இழைவளர் தருமுலை மலைமகள் இனிதுறை தருமெழி லுருவினன்
முழையினின் மிகுதுயி லுறுமரி முசிவொடு மெழமுள ரியொடெழு
கழைநுகர் தருகரி யிரிதரு கயிலையின் மலிபவ னிருளுறும்
மழைதவழ் தருபொழி னிலவிய மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :
அணிகலன்கள் பொருந்திய தனங்களை உடைய மலைமகள் இடப்பாகமாக இனிதாக உறையும் அழகிய திருமேனியை உடையவனும், குகைகளில் நன்கு உறங்கும் சிங்கங்கள், பசி வருதலினாலே மூரி நிமிர்ந்து எழ, தாமரை மலர்களோடு வளர்ந்து செழித்த கரும்புகளை உண்ணும் யானையினங்கள் அஞ்சி ஓடுகின்ற கயிலைமலையில் எழுந்தருளியவனும் ஆகிய பெருமான் கரிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடைய மறைவனத்தில் அமரும் பரமனாவான்.

குறிப்புரை :
இது மறைவனத்துறையும் பரமனே மலைமகள் மணாளன், கயிலையின்பதி என்கின்றது. இழை - ஆபரணம். எழில் - அழகு, முழை - மலைக்குகை. அரி - சிங்கம். முசிவு, மெலிவு. முளரி - தாமரை. கழை - கரும்பு.

பாடல் எண் : 4
நலமிகு திருவித ழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட வரவொடு மதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு தவமுயல் தருமுனி வர்கடம்
மலமறு வகைமன நினைதரு மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :
அணிவிப்பவர்க்கு நலம் மிகுவிக்கின்ற அழகிய கொன்றை மலர், கபாலம், ஊமத்தை, கங்கை நதி, படஅரவு, பிறை ஆகியனவற்றைச் சூடிய சடைமுடியினனாகிய பெருமான், பெரிதாய இவ்வுலகில் வாழும் மனிதர்கள், தவம் முயலும் முனிவர்கள் ஆகியோர் தன்னை வழிபட அவர்கள் மலம் அகன்று உய்யும் வகையை நினையும் மறைவனம் உறையும் பரமன் ஆவான்.

குறிப்புரை :
இது மக்கள் முனிவர் இவர்கள் மலம் அகன்று உய்யும் வகை திருவுளம்பற்றிய மறைவனத்திறைவனே கொன்றையும், கபாலமும், ஊமத்தமும், கங்கையும், அரவும், பிறையும் பொதிந்த சடைமுடியினன் என்கின்றது. இதழி - கொன்றை, நகுதலை - இறந்த பிரமனது மண்டையோடு. கனகி - ஊமத்தை, முனிவர்கள் தம் மலம் அறுவகை எனப்பிரிக்க. நகுதலை, மதி, அரவு முதலியவற்றின் தீமைகளை நீக்கி அருள் செய்கின்றான் என்பது.

பாடல் எண் : 5
கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :
நடை அழகுடன் தன்னை எதிர்த்து வந்த களிறு அஞ்சிப் பிளிற, அதனை உரித்தருளிய மிக்க குணாளனும், உயர்ந்த பசுக்களின் நாயகனாகிய விடையின்மீது வரும் ஆருயிர்களின் தலைவனும் ஆகிய பெருமான், பல கலையும் முறையாகக் கற்று உணர்ந்தவர்களும், விதிகளாகத் தாம் கற்ற நெறிகளில் நிற்போரும் ஆகிய முனிவர் குழாங்களும், மிக்கதவத்தை மேற்கொண்டொழுகும் அதி நிபுணர்களும், தன்னை வழிபடுமாறு வளங்கள் பலவும் வளரும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

குறிப்புரை :
இது பலகலையாகம வேத நூல்களை முறையாகக்கற்று, கற்றவண்ணம் ஒழுகுகின்ற முனிவர்களும், மிகத் தவஞ்செய்யும் அதி நிபுணர்களும் வழிபடும் மறைவனநாதனே யானையை உரித்துப்போர்த்த பெருவீரன், பசுபதிமேல்வரு பசுபதி என்கின்றது. கதி - நடை. அதிகுணன் - குணங்களான் மிகுந்தவன். பசு - இடபம். பசுபதி - ஆன்மாக்கள் அனைவர்க்கும் தலைவன். விதி - செயல்முறை.

பாடல் எண் : 6
கறைமலி திரிசிகை படையடல் கனன்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :
குருதிக் கறைபடிந்த முத்தலைச் சூலம், வருத்தும் தழல் வடிவினதாகிய மழுவாயுதம், கையினின்று எழுவது போன்ற வெறித்த கண்களை உடைய மான், முறைமுறையாக ஒலி செயும் உடுக்கை, முடைநாறும் பிரமகபாலம், முகிழ் போலும் கூரிய கணிச்சி, வடவை முகத்தீ ஆகியன உறையும் திருக்கரங்களை உடையவனும், தாமரை மலரில் எழுந்தருளிய வேதாவாகிய நான்முகனால் உலகில் உயர்ந்த புகழோடு விளங்கும் நினைவோடு வேத விதிப்படி வழிபடப்பெறுபவனுமாகிய சிவபிரான் மறை வனத்தில் உறையும் பரமன் ஆவான்.

குறிப்புரை :
இது உலகத்தில் உயர்வதற்காகப் பிரமன் வழிபட்ட மறைவனத்து இருந்தருள் பரமன் திரிசூலம் முதலியவற்றைத் தாங்கிய எட்டுக்கரங்களையுடையவன் என்கின்றது. கறை - இரத்தக்கறை. திரிசிகை - முத்தலைச்சூலம். அடல்கனல் மழு - வருத்தும் தழல்வடி வாகிய மழுப்படை. எழுதர வெறி மறி - திருக்கரத்தை விட்டு எழும்புவது போலும் வெறித்தகண்ணையுடைய மான். முடைதலை - முடைநாற்றம் வீசும் பிரமகபாலம். முகிழ் மலி கணி - முகிழ்போலும் கூரிய குந்தாலிப்படை. வடமுகம் - வடவாமுகாக்கினி. ஒளி - புகழ்.`ஒளிநிறான்` என்பதும் ஓர்க. மறைவழி - வேதவிதிப்படி. இறைவன் படையிலங்கு கரம் எட்டுடையானாக இருப்பது குறிக்கப்பெறுகிறது.

பாடல் எண் : 7
இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :
பேரூழிக்காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண் புனலில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க, வளி ஆகாயத்தில் ஒடுங்க, பரந்துபட்ட இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும் அழிய, அதுபோது பிரம விட்டுணுக்களது முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன், வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம் அமரும் பரமன் ஆவான்.

குறிப்புரை :
இது ஐம்பெரும் பூதங்களும் ஒன்றினொன்று ஒடுங்க, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடற்பொறையோடு திரிகின்ற இறைவன், மறைவனநாதன் என்கின்றது. நிலன் நீரில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க வளி ஆகாயத்தில் ஒடுங்க அப்போது மாலயன் இருவரும் அழிய, அவர்கள் எலும்பை அணிந்து, தான் ஒருவனே தலைவன் என்பதை உணர்த்தித்திரிபவன் என்பதையும், இத்தகைய சங்காரகாரணனையே உலகு முதலாகவுடையது என்பதையும் உணர்த்திநிற்பன் என்பதாம். இனமலர் - கூட்டமான மலர், அறுபதம் - வண்டு. இது ஒடுக்க முறை கூறியது. இதனால் மண் முதலிய பூதங்கள் ஒன்றினொன்று தோன்றும் என்பதுபெறப்படுகிறது. இதனையே உட்கொண்டு இப்பாடலும் ஒடுக்கமுறை கூறுகிறது. இது காரியத்தின் குணம் காரணத்தினும் உண்டென்பது நியமமாகலின் புடவிக்குரிய ஐந்து குணங்களும் அதற்குக் காரணமென்ற புனலுக்கும் உளவாதல் வேண்டும். அங்ஙனமே ஏனைய பூதங்கட்கும், அஃதின்மையின் ஒரு பூதம் மற்றொரு பூதத்திற்குக் காரணமாகாது பஞ்சதன்மாத்திரைகளே காரணமாகும் என்பது சைவசித்தாந்தத் துணிபு. அதனோடு ஒடுக்கமுறை கூறும் இச்செய்யுள் முரணுமெனின், முரணாது. மாதவச் சிவஞான யோகிகள் மாபாடியத்து இச்செய்யுளை எடுத்துக்காட்டிக் கூறுவது: `அற்றேல், வேதத்துள் அங்ஙனம் 1 ஒன்றினொன்று தோன்று `மென்ற வாக்கியத்தோடும்,` இருநில னதுபுன லிடை மடி தரவெளி புகவெரி யதுமிகு - பெருவெளியினிலவி தரவளி கெடவியனிடைமுழுவதுகெட - விருவர்களுடல் பொறையொடுதிரி யெழிலுருவுடையவன் `எனச் சங்கார முறைபற்றி வேதவாக்கியப் பொருளை வலியுறுத்தோதிய திருப்பாட்டோடும் முரணுமாலெனின், - அற்றன்று;1 வேதஞ்சிவாகமம் இரண்டும் செய்த முதற்கருத்தா பரமசிவ னொருவனேயாகலின், அவைதம்முண் முரணுமாறின்மையின், ஒரோவழிமுரணுவன போலத் தோன்றியவழி, முரணாகாதவாறு வன்மை மென்மைபற்றித் தாற்பரியங்கோடல் வேண்டும். அற்றாகலினன்றே 2 தேயுமுதன் முப்பூதங்கட்கே தோற்றங்கூறி,`இம்முப்பூதமயமே பிரபஞ்சமெல்லாம் `என விரித்தோதிய சாந்தோக்கியவுபநிடதமும், ஆகாயமுதல் ஐந்திற்குந்தோற்றங்கூறி,`ஐம்பூதமயமே பிரபஞ்சமெல்லாம்` என்னும் தைத்திரீயவுபநிடதமும் தம்முண் முரணுவனபோலத் தோன்றுதலின், அங்ஙனம் முரணாமைப் பொருட்டு வன்மைமென்மைநோக்கித் தைத்திரீயத்திற் கூறியதே பிரமாணமெனவும், சாந்தோக்கியத்திற்கூறும் வாக்கியங்கட்கும் அதுவே தாற்பரியமெனவும், உத்தரமீமாஞ்சையின் வியததிகரணத்து ளோதியதூஉம்; மற்றும் ஆண்டாண்டு முரணாதவண்ணம் ஒன்று முக்கியப்பொருளும், ஒன்று தாற்பரியப்பொருளுமாக வைத்துப் பொருளொருமையுணர்த்தியதூஉ மென்க. ஆதலின் இப்பகுதிக்கு நிலம் இரதத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற கந்த தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும், நீர் உருவத்தோடு கூடி விசிட்டமாய்நின்ற இரத தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும் தீ பரிசத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற உருவ தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும், காற்று சத்தத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற பரிச தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும், ஆகாயம் பிரமமாகிய சதா சிவத்தால் அதிட்டிக்கப்படும் சத்த தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும் பொருள் கோடலே மரபாம்.

பாடல் எண் : 8
சனம்வெரு வுறவரு தசமுக னொருபது முடியொடு மிருபது
கனமரு வியபுய நெரிவகை கழலடி யிலொர்விர னிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ் வுறவருள் செய்தகரு ணையனென
மனமகிழ் வொடுமறை முறையுணர் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :
மக்கள் அஞ்சுமாறு வருகின்ற இராவணனின் பத்துத் தலைகளோடு பெரிதாய இருபது தோள்களும் நெரியுமாறு வீரக்கழல் அணிந்த திருவடியில் உள்ளதொரு விரலை ஊன்றி அடர்த்தவன். அவன் பிழை உணர்ந்த அளவில் அரக்கர் கூட்டமுடைய அவ்இராவணன் மனம் மகிழ்வுறுமாறு பேர், வாழ்நாள், தேர், வாள் முதலியன அளித்தருளிய கருணையாளன் என நான்மறைகளை முறையாக உணர்ந்த வேதியர் மனமகிழ்வொடு புகழும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

குறிப்புரை :
இது இராவணனுக்கு அருள் செய்த கருணையை யுடையன் என்று அனைவரும் உணர `மறைவனம் அமர்தரு பரமன்` இருக்கின்றான் என்கின்றது. சனம் - மக்கள். கனமருவிய புயம் - பருத்ததோள். இனம் மலி - அரக்கர் கூட்டத்தால் நிறைந்த, நிசிசரன் - இராவணன்.

பாடல் எண் : 9
அணிமலர் மகள்தலை மகன்அயன் அறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர வவர்வெரு வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுரு வியபர னவனுரை மலிகட றிரளெழும்
மணிவள ரொளிவெயின் மிகுதரு மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :
அழகிய மலர்மகள் கேள்வனும், அயனும் அறிதற்கு அரியதொரு தன்மையில் அனல் செறிந்த பிழம்புருவத்தோடு தோன்ற அதனைக் கண்டு அவ்விருவரும் அஞ்சித் துதி செய்து பணிய, வானவெளியைக் கடந்த பேருருவத்தோடு காட்சி நல்கிய பரனாகிய அவன் நுரைமிக்க கடல் திரட்சியில் தோன்றும் மணிகளின் வளர் ஒளியினால் வெயிலொளி மிகுந்து தோன்றும் மறைவனத்தில் அமரும் பரமன் ஆவான்.

குறிப்புரை :
மறைவனத்துப் பரமனே அயனும் மாலும் அறி யொண்ணாதபடி அண்ணாமலையாய், அவர்கள் அச்சத்தோடு துதிசெய்ய வெளிப்பட்டு உருவங்கொண்ட பரன் என்கின்றது. மலர் மகள் தலைமகன் - திருமால். பரிசு - தன்மை. எரி திணிதரு திரள் உரு - செறிவான தீப்பிழம்பின் வடிவு, வெளி உருவிய - ஆகாயத்தைக் கடந்த, நுரை மலிகடல் - நுரைமலிந்த கடல்.

பாடல் எண் : 10
இயல்வழி தரவிது செலவுற வினமயி லிறகுறு தழையொடு
செயன்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்பட முடல்பொதி பவரறி வருபர னவனணி
வயலினில் வளைவள மருவிய மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

உலக இயல்பு கெடுமாறு நடை உடை பாவனைகளால் வேறுபடத் தோன்றிப் பல மயில்களின் தோகைகளைக் கொண்டு வழிகளை உயிரினங்களுக்கு ஊறு வாராதபடி தூய்மை செய்து நடத்தலைச் செய்து சிறிய குண்டிகை வைக்கப்பட்ட உறியை ஏந்திய கையராய்த் தலையைப் பறித்து முண்டிதமாக்கிக் கொண்டு தவம் முயலும் சமணர்களும், துவராடையால் உடலை மூடியவர்களாகிய புத்தர்களும் அறிதற்கரிய பரனாகிய அவன், அழகிய வயலில் சங்கீன்ற முத்துக்கள் நிறைந்துள்ள மறைவனத்தில் அமர்ந்துறையும் பரமன் ஆவான்.

குறிப்புரை :
இது புறச்சமயத்தாரால் அறியமுடியாத பரன் `மறை வனநாதன்` என்கின்றது. இயல்வு அழிதர - உலகவியற்கை கெட, விதுசெலவுற - காற்று வீச. மயில் இறகு தழையொடு - மயிற்பீலிக் கற்றையொடு. செயல் மருவிய சிறுகடம் முடி - வேலைப்பாடமைந்த குண்டிகை வைக்கப்பட்ட உறி, துவர்படம் - கல்லாடை. வளை வளம் - சங்குதந்த முத்தாகிய வளப்பங்கள்.

பாடல் எண் : 11

வசையறு மலர்மக ணிலவிய மறைவன மமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல வவருல கினிலெழில் பெறுவரே.

பொழிப்புரை :

குற்றமற்ற திருமகள் நிலவும் மறைவனத்தில் அமர்ந்துள்ள பரமனை அன்போடு நினையும் மிகுந்த கலைகளில் வல்ல புலவர்களின் புகழோடு வளரும் கழுமலநகர்த் தலைவனும் தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தனுடைய இயற்றமிழிலும் மேம்பட்ட இசை மலிந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகினில் அழகெய்துவர்.

குறிப்புரை :
இது மறைவனநாதனை மனத்தெண்ணிய அன்போடு, கற்றார் பயிலும் காழி ஞானசம்பந்தன் சொன்ன இப்பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் உலகில் அழகெய்துவர் என்கின்றது. வசையறு மலர்மகள் - குற்றமற்ற திருமகள், திருமகளுக்குக் குற்றம் ஓரிடத்தும் நில்லாமையும், தக்காரிடத்துச் செல்லாமையும் போல்வன. மறைவனத்து அங்ஙனம் இல்லாமையின் குற்றமற்றவள் ஆயினள்.

திருமறைக்காடு


திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


Sunday 28 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருச்சிவபுரம்

பாடல் எண் : 1
புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண மமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே.


பொழிப்புரை :
விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும், முக்குணங்களையும், விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில் வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், தம்முடைய படைப்பாற்றல் நினைவோடு நல்ல தாமரைமலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத்தலத்தை நினைப்பவர் வளமையான இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர்.


குறிப்புரை :
இது இறைவனே சிருட்டித்தொழில் இடையறாது நிகழ்த்தத் திருவுள்ளங் கொள்கின்றார். அத்தொழிலைச் செய்யும் பிரமன் அந்தப்பாவனையில் இருந்து சிருட்டிக்கின்றான். ஆதலால் பவமலி தொழிலது நினைவொடு இருக்கும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவபுரத்தை நினைப்பவர் நிலைபேறான வாழ்வடைவர் என்கின்றது. புவம், வளி, கனல், புனல், புவி - விண்ணாதி மண்ணந்தமாகிய ஐம்பெரும் பூதங்கள். புவம் - வான், கலை - எண்ணெண் கலைகள். உரைமறை - இறைவன் புகழைச்சொல்லும் வேதம். திரிகுணம் -சத்துவம் முதலிய மூன்று குணங்கள். அமர்நெறி - விரும்பத்தக்க மார்க்கங்கள். திவம் - தேவலோகம். உயிரவை - தேவர் முதலாகத் தாவரம் ஈறாகச்சொல்லப்பட்ட உயிர்கள். அவைதம பவமலி தொழிலது நினைவொடு - அவ்வவ் ஆன்மாக்களுடைய வினைக்கு ஈடாக அருளப்படுகின்ற பிறவிக்கேற்ற சிருட்டித்தொழிலின் நினைவொடு. எனவே இறைவன் பிரமனைப்போல விகாரியாய்ப்படைப்பவனல்லன், இச்சையால் எல்லாம் இயங்குகின்றன என்பது. பதுமநன்மலரது மருவிய சிவன் - தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் சிவன். சிவபெருமான் பிரமன் உருக்கொண்டு வீற்றிருப்பாரல்லர். இத்தகைய திருவுருவத்தைப்பிரமன் தியானித்தலான் சிருட்டி கைவரப்பெறுவன் என்பது.


பாடல் எண் : 2
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர் முத லுலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகட னடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே.


பொழிப்புரை :
மலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள், விண்ணில் நிலை பேறுடையவராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல் தொழில் நினைவோடு, மிகுந்துவரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி, கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்.


குறிப்புரை :
இது எல்லா உலகங்களும் தத்தம் கால எல்லை வரையில் நிலைபெறுக என்னும் திருவுள்ளக் குறிப்போடு பாற்கடல் மேல் பள்ளிகொள்ளும் திருமால் உருவின் இயல்போடு அரன் உறையும்பதி. நினைப்பவர் திருமகளோடு திகழ்வர் என்கின்றது. உலகு நிலைப்பதற்கு மலை இன்றியமையாமையின் மலை பல வளர் தருபுவி எனப் புவியை விசேடித்தார். மறைதரு வழிமலி மனிதர்கள் - வேத விதியின்படி அக ஒழுக்கத்தையும், புறவொழுக்கத்தையும் வரையறுத்தமக்கள். நிலைமலிசுரர் - மக்களைக்காட்டிலும் வாழ்வால் நீடித்த தேவர்கள், முதல் உலகுகள் என்றது, விண்ணும் மண்ணும் கூறவே இடைப்பட்டனவெல்லாம் உணரவைத்தார், அறிதுயில் - யோகநித்திரை.


பாடல் எண் : 3
பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலமலி தருமுயி ரவையவை
முழுவது மழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே.


பொழிப்புரை :
பழுதுபடாத, கடலால் சூழப்பட்ட நிலவுலகம் முதலிய எல்லா உலகங்களையும், அவ்வுலகங்களில் நிறைவுடன் குழுமிவாழும் தேவர்கள் நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர் ஆகிய அனைவர் உயிர்களையும் அழிக்கும் வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து அவனுருவில் அழித்தலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதியாகிய செழுமையான மணிகள் அழகு செய்யும் சிவபுரநகரைத் தொழுவோரின் புகழ் உலகில் மிகும்.


குறிப்புரை :
இது நிலம் முதலிய உலகுகள் முழுவதுமழியும்படி ருத்திராம்சத்தோடு எழுந்தருளும் இறைவன் பதியைத் தொழுமவர் புகழ் உலகில் மிகும் என்கின்றது. கடல்புடை தழுவியபடி என்றது சங்கார கிருத்தியத்திற்குப் பயன்படும் தண்ணீரைக் கூறி விசேடித்தபடி. படி - பூமி. படி முதலிய உலகுகள் என்றது ஒடுக்க முறைக்கண் பிருதிவி முதலாயின முறையே தத்தம் காரணமாகிய மாயையில் ஒடுங்கும் முறை பற்றி. உயிரவை அவை முழுவதும் அழிவகை என்றது உயிர்கள் ஒடுங்குதலை உயிர்களுக்கு என்றும் அழிவின்மையின். முதல் - இறைவனது உருவாகிய உருத்திரவடிவு.


பாடல் எண் : 4
நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடியவர்
குறைவில பதமணை தரவருள் குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே.


பொழிப்புரை :
மணம் மிகுந்த சந்தனம், அரும்புகள், இதழ் விரிந்த மலர்கள், குங்கிலியம், சீதாரி முதலிய தூபம், ஒளி வளர் தீபங்கள், நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு நீராட்டியும், மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர், குறைவிலா நிறைவான சாமீபம் முதலான முத்திகளை அடைய அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி, நீர் நிலைகள் பலவற்றாலும் வளம் நிரம்பி விளங்கும் சிவபுரமாகும். அதனை நினைபவர் சயமகள் தலைவராவர்.


குறிப்புரை :
இது அபிஷேக ஆராதனைப் பொருள்களோடு நியதியாக வழிபடும் அடியார்களுக்குக் குறைவிலாப் பதத்தைக் கொடுக்கும் மகேச்சுரனது பதியை வழிபடுமவர்கள் செயமகளுக்குத் தலைவராவர் என்கின்றது. நறை மலிதரும் அளறு - மணம் மிகுந்த சந்தனம். முகை நகு மலர் - முகையும் மலரும், புகை - தூபம். ஒளி - தீபம். நினைவொடு - ஈசுவர தியானத்தோடு. நியதமும் - ஒழுங்காக. குறைவிலபதம் - சாமீபம், வனபதி - அழகியநகரம். சிறைபுனல் - மதகுகளோடு கூடிய புனல். இது கிரியாவான்கள் பெறுபயன் கூறியது.


பாடல் எண் : 5
சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொரு ணியதமு முணர்பவர்
தனதெழி லுருவது கொடுவடை தகுபர னுறைவது நகர்மதிள்
கனமரு வியசிவ புரநினை பவர்கலை மகள்தர நிகழ்வரே.


பொழிப்புரை :
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் ஆறு பகைகளையும் வென்று, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும் வகையில், காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமத்தைப் புரிந்தும், தியானித்தலால் உள்ளத்தில் தோன்றியருளும் ஒளிப்பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் உணர்பவராகிய யோகியர்கட்குத் தனது எழிலுருவாகிய சாரூபத்தைத் தந்தருளும் சிவபிரான் உறைந்தருளும் நகர், மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைபவர், கலைமகள் தன் அருளைத் தர வாழ்வர்.


குறிப்புரை :
இது அகப்பகை ஆறும் வென்று ஐம்பொறி அடக்கி, பிராணவாயுவை ஒழுங்குபடுத்திய யோகியர்க்குச் சாரூபந் தரும் பரசிவன் பதியாகிய சிவபுரத்தை நினைப்பவர் சாரூபர்களாவார்கள் என்கின்றது. சினமலி அறுபகை - கோபம் முதலிய உட்பகையாறும், இதனை அரிஷட்வர்க்கம் என்பர் வடநூலார். பொறி - ஐம்பொறிகள். பொறிகள் புலன்களைச் சென்று பற்றுவதைத்தடுப்பது பிராணாயாமம் ஒன்றே என்பதாம். மனன் உணர்வு - தியானம். மலர் மிசை எழுதரு பொருள் - பிரமரந்தரத்தின் கண்ணதாகிய சகஸ்ரதளத்தையுடைய தாமரை மலரின்மேல் எழுந்தருளியிருக்கும் பேரொளிப்பிழம்பாகிய பொருளை. நியதமும் உணர்பவர் - அனவரதமும் அறிபவர்கள். தனது எழில் உருவு கொடு - தன்னுடைய அழகிய வடிவத்தைக் கொண்டு. என்றது கண்டக்கறையும் கங்கையும் ஒழிந்த சாரூபத்தை. கனம் - மேகம்.


பாடல் எண் : 6
சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி
திருவருள் சிவபுர நினைபவர் திகழ்குல னிலனிடை நிகழுமே.


பொழிப்புரை :
வேதங்களையும், பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான கலைகளையும், குற்றம் அறப் பயின்று, உலகியலில் பழி பாவங்களுக்கு அஞ்சித் தூய ஒழுக்க சீலராய் உலகம் புகழ விளங்கி உடலின்கண் உள்ள பொறிகள்வழி ஒழுகாது அரிய தவத்தை மேற்கொண்ட அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை சங்கற்பிக்கும் சிவபிரான் உறையும் பதி திருவருள் தேங்கிய சிவபுரமாகும். அத்தலத்தை நினைவோர்தம் விளக்கமான குலம் உலகிடை நின்று நிகழும்.


குறிப்புரை :
வேதம் முதலான கலைகளைக் குற்றமறப்பயின்று உலகம் புகழ, பொறிவாயில் அவித்து, அருந்தவம் முயல்வார்கள் திருவடி ஞானத்தைப்பெறத் திருவுளங்கொண்டருள்கின்ற பரமசிவன் உறை பதியைச் சிந்திப்பவர் குலம் நிலத்திடை நீடுவாழும் என்கின்றது. பலநலமுதல்கலை - பலவாகிய நன்மைகளைக் கருதுகின்ற கலை. துகள் அறுவகை - சந்தேக விபரீதங்கள் அறும்படி, உருவு இயல் - தோற்றத்தின் அழகு. தனது அடி அடைவகை: இது சாயுச்சியம் அளிப்பது அறிவித்தது.


பாடல் எண் : 7
கதமிகு கருவுரு வொடுவுகி ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக ழெயிறத னுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய வெழிலரி வழிபட வருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுர நினைபவர் நிலவுவர் படியிலே.


பொழிப்புரை :
திருமால் வராக அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.


குறிப்புரை :
ஆதிவராகமான அரிவழிபட அருள் செய்தவரது சிவபுரத்தை நினைபவர் என்றும் விளங்குவர் என்கின்றது. கதம் மிகு - கோபம் மிகுந்த. கருவுருவொடு - கறுத்த மேனியோடு. உகிர்இடை - நகங்களின் இடையே. மதம் மிகு நெடுமுகன் அமர் - மதம் மிக்க நீளமான முகத்திலே இருக்கின்ற. வளைமதி திகழ் எயிறு - பிறை மதியையொத்த கோரப்பல். நுதி - நுனி. இதம் அமர் புவி - இன்பத் தோடு இருக்கின்ற பூமி. ஆதிவராக உருவெடுத்த திருமாலின் சத்தி பூமியாதலின், அவள் வராகத் தந்தத்தில் இதமாக இருந்தாள் என்றார். பதம் - திருவடி.


பாடல் எண் : 8
அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை யிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுர நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே.


பொழிப்புரை :
உடல் வருத்தத்தைத் தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ்ச்செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி, எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும். அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில் எஞ்ஞான்றும் வாழ்வர்.


குறிப்புரை :
இது பிரமன் அருளால் வந்த தவவலிமையைக் கொண்டு இறைவனது கயிலையையெடுத்த இராவணனது முடியை நெரித்த முதல்வன் நகரத்தை நினைபவர் உலகத்தில் என்றும் வாழ்வர் என்கின்றது. அசைவுஉறுதவம் - வருத்தம்மிக்க தவம். முயல் வினில் - முயன்றதால். நிசிசரன் - இராவணன்.


பாடல் எண் : 9
அடன்மலி படையரி யயனொடு மறிவரி யதொரழன் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண துடையுரு வெளிபடு மவனகர்
திடமலி பொழிலெழில் சிவபுர நினைபவர் வழிபுவி திகழுமே.


பொழிப்புரை :
வலிமை மிக்க சக்கராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கரிய வகையில் அழல்மிக்க பேரொளிப்பிழம்பாய் வெளிப்பட்டருள அதனைக் கண்ட அவர்கள், அச்சங் கொண்டு துதி செய்த அளவில் அவர்கட்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு காட்சி நல்கிய சிவபிரான் எழுந்தருளிய தலம், உறுதியான மரங்கள் செறிந்த பொழில்கள்சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும். அதனை நினைபவரும் அவர் மரபினரும் உலகில் புகழோடு விளங்குவர்.


குறிப்புரை :
அயன் மால் இவர்களுக்கிடையே அழல் வண்ணராய்த் தோன்றி, அவர்கள் துதிசெய்யக் கண்ணுதல் கண்டக் கறையோடு கூடிய தனதுருவத்தைக்காட்டிய இறைவன் நகரத்தை நினைப்பவர் வைத்தபடி உலகம் நடக்கும் என்கின்றது. அடல் மலிபடை - வலிமை மிக்க சக்கரம். அவர் வெருவொடு துதி அது செய்ய -அவர்கள் அச்சத்தோடு துதிக்க (அதற்காக இரங்கி) வெளிபடுமவன் எனக் கூட்டுக. விடமலிகளம் - நீலகண்டம். நுதலமர் கண் அது உடை உரு - நெற்றிக் கண்ணையுடைய உரு. நினைபவர் வழி புவிதிகழும் எனப்பிரிக்க. வழி - வமிசம்.


பாடல் எண் : 10
குணமறி வுகணிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர னுறைதரு பதியுல கினினல
கணமரு வியசிவ புரநினை பவரெழி லுருவுடை யவர்களே.


பொழிப்புரை :
குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப் பொருள்களும், உரைக்கும் உரையால் உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும், அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின, இது திண்ணம் எனவும், கணபங்க வாதம் புரியும் கேட்டிற்குக் காரணமான அறிவினராகிய புத்தர்களும், தமது கையில் நிறைந்த உணவை வாங்கி உண்ணும் சமணர்களும், உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி, இவ்வுலகில் நல்லவர்கள் திரளாய் வாழும் சிவபுரமாகும். அதனை நினைப்பவர் அழகிய உருவோடு விளங்குவர்.


குறிப்புரை :
குணம் அறிவு முதலாயின நிலையில்லாதன; உலகப்பொருள்களும் அங்ஙனமே என்னும் கணபங்கவாதிகளான புத்தர்களும் சமணர்களும் அறிவரிய அரன்பதியை நினைப்பவர் அழகான வடிவத்தையடைவர் என்கின்றது. குணம் அறிவுகள் நிலையில எனப்பிரிக்க. செதுமதி - குற்றம் பொருந்திய புத்தி. கை உணல் உடையவர் - கையில் பிச்சையேற்றுண்ணும் சமணர்.


பாடல் எண் : 11
திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே.


பொழிப்புரை :
இவ்வுலகில் புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுரநகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச்சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித்திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெறுவர்.


குறிப்புரை :
இதுவரை பாடல்தோறும் சிவனியல்பும், அவர் எழுந்தருளியுள்ள நகரழகும், அவரை அடைவார் அடைந்து வந்த பயன்களும் கூறிவந்த பிள்ளையார் இப்பாட்டில் இப்பதிகத்தைப் படிப்பார் எய்தும் பயனைத் தொகுத்துக் கூறுகின்றார். குலம் (6) நிலம் (8) நிறை திரு (2) உரு (10) சயமகள் (4) கலைமகள் (5) புகழ் (3) புவி வளர்வழி (9) அடிமை (7) இவ்வாறு இப்பதிகப்பயன் ஒவ்வொரு பாடலிலும் இருப்பதை ஓர்ந்து உணர்க.

நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழா இருபத்தியைந்தாவதுநாள் - 2011 - தீர்த்ததிருவிழா


ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


Saturday 27 August 2011

திருச்சிவபுரம்


திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருவீழிமிழலை

பாடல் எண் : 1
தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட வரவுகொ
டடலசு ரரொடம ரர்களலை கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.


பொழிப்புரை :
பெரியதாகிய மந்தரமலையை மத்தாக நிறுத்தி, அழல் போலும் கொடிய நஞ்சை உமிழும் படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி வலிய அசுரர்களோடு தேவர்கள் அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்த விடத்துத்தோன்றிய உக்கிரமான ஆலகாலம் என்னும் நஞ்சு அடைந்த கண்டத்தை உடையவனும், விடையின்மீது வருபவனும் ஆகிய சிவபிரான் உறையும் தலம், நான்மறைகளை முறையாக ஓதி உணர்ந்த உறுதி வாய்ந்த மறையவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
தேவர்கள் பாற்கடல் கடைந்த வரலாறு முதல் மூன்று அடிகளில் குறிக்கப்பெறுகிறது. தடம் நிலவிய மலை -விசாலமாகிய மந்தர மலை. அரவுகொடு அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எனப்பிரிக்க. திடம் - மனஉறுதி. மறையவர் என்ற பெயர் மறையைமுறையே உணர்தலால் வந்தது எனக் காரணக்குறியாதல் விளக்கியவாறு.


பாடல் எண் : 2
தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை யரிபெற வருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடன்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே.


பொழிப்புரை :
மண்ணுலகத்தோடு விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய சலந்தராசுரனின் மலைபோன்ற தலையை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தைத் திருமால் வேண்ட அவர்க்கு அருளியவனும், புகழால் மிக்க கங்கை நதி மதி ஆகியன பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம், பெரிய அலைகளை உடைய கடற்கரை, மணலால் அழகுபெறும் மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
முதல் இரண்டடிகள் சலந்தரன் சிரங்கொய்த சக்கரத்தைத் திருமாலுக்கருளியது குறிக்கப்படுகிறது. திவிதலம் - விண்ணுலகம். சலதரன் - சலந்தராசுரன். வரையன தலை - மலையையொத்த அவனது தலை. திகிரி - சக்கராயுதம், திருமால் ஆயிரம் தாமரை கொண்டு அருச்சித்தமைக்காகச் சக்கராயுதம் அருளினார் என்பது இத்தல வரலாறு. உரைமலிதரு - புகழ் மலிந்த. சுரநதி - தேவகங்கை. கடற்கரை மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலை என்பது சிந்திக்கத்தக்கது. அவர்கள் காலத்து இத்தலம் நெய்தல் வேலியாக இருந்திருக்கும் போலும்.


பாடல் எண் : 3
மலைமக டனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகர மறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே.


பொழிப்புரை :
மலைமகளாகிய பார்வதிதேவியை இகழ்ந்த அறிவற்ற அற்பபுத்தியையுடைய தக்கனுடைய தலையோடு அழலோனின் கை ஒன்றையும் அரிந்து, தன் சினத்தை வெளிப்படுத்திய சிவபிரான்உறையும் தலம், கலை ஞானம் நிரம்பிய புலவர்களின் வறுமைத் துன்பம் நீங்க நிறைந்த செல்வத்தை வழங்கும் கொடையாளர்கள் வாழ்வதும் பெரிய மதில்களால் சூழப் பெற்றதும் விளங்குகின்ற பொழில்கள் வளர்வதுமாய திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
முதல் இரண்டடிகளில் தக்கன் சிரங்கொய்த வரலாறும், அக்கினியைக் கையரிந்த வரலாறும் குறிக்கப்படுகின்றன. மதியறுசிறுமனவன் - புத்திகெட்ட சிறுமனத்தையுடைய தக்கன். உயர்தலை -மனிதத் தலை. அழல் உருவன கரம் - தீவடிவினனாகிய அக்கினியினது கை. சிலை மலிமதிள் - மலையைப் போன்ற மதில்கள். இத்தலத்திலுள்ள கொடையாளிகள் புலவர்களின் துன்பங்களைக் களைகின்றார்கள்.


பாடல் எண் : 4
மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினனல மலிதரு கரனுர மிகுபிண மமர்வன
இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே.


பொழிப்புரை :
பகைமை பாராட்டிய திரிபுராதிகளின் முப்புரங்களும் எரியில் அழியுமாறு கணை ஒன்றைச் செலுத்திய பெருவலி படைத்தவனும், நன்மைகள் நிறைந்த திருக்கரங்களை உடையவனும், வலிய பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில் நள்ளிருட்போதில் சென்று அங்குத் தன்னை வந்தடைந்த பேய்களோடு நடனமாடி இசை பாடுபவனுமாகிய பரமன் மகிழ்வோடு உறையும் பதி, தெருக்கள் தோறும் நிகழும் பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்து வளரும் திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது இறைவனது திரிபுரமெரித்த வீரத்தையும், கைவண்மையையும், சுடுகாட்டில் நடமாடிய செயலையும் குறிப்பிடுகிறது. மருவலர் - பகைவர்; திரிபுராதிகள். நலம் மலிதரு கரன் - நன்மை மிகுந்த திருக்கரங்களையுடையவன். உரமிகுபிணம் - வலிமைமிக்க பிணங்கள். அமர்வன இருள் இடை அடை உறவொடு நடை விசை உறு பரன் எனப் பிரிக்க.


பாடல் எண் : 5
அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர வறநெறி மறையொடும் அருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
திணிபொழி றருமண மதுநுகர் அறுபத முரல்திரு மிழலையே.


பொழிப்புரை :
அழகிய கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து தம் திருவடி இணைகளைச் சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒருபுறமும், சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் மறுபுறமும் பணிய அவர்கட்கு அறநெறியை வேதங்களோடும் அருளிச்செய்த சிவபிரான் உறையும் இடம், ஒளி பொருந்திய மணிகள் ஒப்பில்லாத மரகதம் ஆகியவற்றை அடித்துவரும் ஆற்று நீர் நிலமெல்லாம் நிறைந்து வளங்களால் அணி செய்யப் பெறுவதும் செறிந்த பொழில்கள் தரும் மணத்தை நுகரும் வண்டுகள் முரல்வதுமான திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு உரைத்தவரலாறு அறிவிக்கிறது. வடமரநிழல் - ஆலநிழல். அமர்வு - விருப்பம். இருவர்கள் - சனகர் முதலிய நால்வரும், இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் இருவர் இருவராக இருந்தமை கருதற்குரியது. மறை - இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டும் அநுபவநிலை. பொழில்தரு மணமது நுகர் அறுபதம் முரல் திருமிழலை எனப் பிரிக்க.


பாடல் எண் : 6
வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரும் அவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே.


பொழிப்புரை :
குற்றமற்ற வலிய வேடர் உருவைக் கொண்டு, நினைதற்கும் அரிய கடுந்தவத்தைச் செய்யும் விசயனுடைய வலிமையை உமையம்மைக்கு அறிவுறுத்தும் வகையில் அவனோடு வலிய போரைத் தன் வலிமை தோன்றச் செய்து அவ்விசயனுக்குத் தோல்வி எய்தாத பாசுபதக் கணையை வழங்கி அருள்புரிந்த சிவபிரான் உறையும் பதி, செறிந்த மரங்கள் திசைகள் எங்கும் மலர்கள் பூத்துக் குலாவும் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலை யாகும்.


குறிப்புரை :
இது விசயன் வீரத்தை உமாதேவிக்குக் காட்டிப் பாசு பதம் அருளிய வீரம் குறிப்பிடுகிறது. வசையறு வலி - குற்றமற்ற வலிமை. வனசர உருவு - வேட உருவம். நினைவரு தவம் - முனிவர் எவரும் நினைத்தற்கரிய கடுந்தவம், மிடல் - வலிமை, அசைவில படை - தோற்காத பாசுபதாஸ்திரம்.


பாடல் எண் : 7
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை யொளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவ னுறைபதி
திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே.


பொழிப்புரை :
நன்மைகள் பலவும் நிறைந்த வேத மந்திரங்களை ஓதி, ஆற்று நீர், மணப்புகை, தீபம், மலர்கள் ஆகியனவற்றைக் கொண்டு பூசை புரிந்து வழிபடும் மறையவனாகிய மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த வஞ்சகம் மிக்க இயமனின் உயிர் கெடுமாறு உதைத்தருளிய சிவபிரான் உறையும்பதி, உலக மக்கள் திலகம் எனப்புகழ்வதும் பொழில்கள் சூழ்ந்துள்ளதுமான திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது மார்க்கண்டேயற்காகக் காலனை உதைத்த வரலாற்றைக் கூறுகிறது. மறைமொழியொடு - வேதமந்திரங்களொடு. நதியுறு புனல் - தேவகங்கையின் திருமஞ்சனதீர்த்தம். புகை ஒளி முதல் - தூபம் தீபம் முதலான ஆராதனைப் பொருள்கள். மறையவன் - மார்க்கண்டேயன். சலம் மலிதரு மறலி - வஞ்சம் மிகுந்த இயமன். உலகுகள் திலகம் இது எனப் புகழ்தரு பொழில் அணிமிழலை எனமாறிக் கூட்டுக.


பாடல் எண் : 8
அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே.


பொழிப்புரை :
சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை நிலைகுலையச் செய்து அதனைப் பெயர்த்த பத்துத் தலைகளை உடைய இராவணனுடைய இருபது கரங்களும் நெரியுமாறு தன் கால்விரலை ஊன்றிய வீரக்கழல் அணிந்த திருவடிகளை உடையவனும், வரன் முறையால் உலகைப் படைக்கும் பூவின் நாயகனான பிரமன் வழிவழுவியதால் ஐந்தாயிருந்த அவன் சிரங்களில் ஒன்றைக் கிள்ளி எடுத்து அதன்கண் பலியேற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் பதி திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது வழக்கம்போல இராவணன் வரலாறு கூறுகிறது. தசமுகன் - இராவணன். வரன்முறை உலகவைதரும் மலர்வளர் மறையவன் - அந்தந்த ஆன்மாக்களுக்கு வகுக்கப்பெற்ற நியதி தத்துவத்தின் வழிநின்று உலகம் உடல் போகம் இவற்றைப்படைக்கின்ற பிரமன். வழிவழுவிய - உமாதேவியாரை இகழ்ந்ததாகிய தவறு இழைத்த.


பாடல் எண் : 9
அயனொடு மெழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழ னிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதின் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே.


பொழிப்புரை :
நான்முகனும் அழகிய மலர்மகள் கேள்வனாகிய கண்ணனும் அளவிடமுடியாது அஞ்சி நிற்க, ஒரு சோதிப்பிழம்பாய்த் தோன்ற அவ்விருவரும் முறையாக சயசய எனப்போற்றித் துதிசெய்யுமாறு அண்டங்கடந்த அச்சிவபிரான் உறையும் பதி, வெற்றி விளங்கும் மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது அயனும் மாலும் அறியாத அழல் உருவாய் நின்ற வரலாற்றை அறிவிக்கிறது. மலர் மகள் மகிழ் கணன் - திருமகள் மகிழும் கண்ணனாகிய திருமால். தழல் நிகழ்வதொர்படி உருவது வர - தீப்பிழம்பாக ஒளிரும் திருமேனி பொருந்த, வெளி உருவிய அவன் - ஆகாயத்தைக் கடந்த அவன்; செயம் நிலவிய மதில் - வெற்றி விளங்குகின்ற மதில்.


பாடல் எண் : 10
இகழுரு வொடுபறி தலைகொடும் இழிதொழின் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடவடி யவர்மிக வருளிய
புகழுடை யிறையுறை பதிபுனல் அணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே.


பொழிப்புரை :
பிறரால் இகழத்தக்க உருவோடும் உரோமங்களைப் பறித்தெடுத்தலால் முண்டிதமான தலையோடும் இழி தொழில் மிகுதியாகப்புரியும் சமணர்களாகிய தந்திரசாலிகளும், விளங்கும் மருதந்துவராடையை உடலில் போர்த்துத் திரியும் சாக்கியர்களும் அழிந்தொழியத்தன் அடியவர்களுக்கு மிகவும் அருள் புரிபவனும் புகழாளனுமாகிய இறைவன் உறையும் பதி நீர்வளம் மிக்கதும் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகில் விளங்கும் சுரர் தருவாகிய கற்பகம் போன்ற கொடையாளர் மிக்கு விளங்குவதுமாகிய திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது சமணர்கெட அடியவர்க்கருளியதையறிவிப்பது. இகழ் உரு - பிறரால் இகழத்தக்க வடிவம். துவர் உடை உடல் பொதிபவர் - உடல் முழுவதும் போர்த்து மூடும் புத்தர். சுரர்தரு நிகர் கொடையினர் - கற்பக விருட்சத்தையொத்த கொடையினையுடையவர்.


பாடல் எண் : 11
சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே.


பொழிப்புரை :
சினவேகத்தோடு வந்த யானையை உரித்துப்போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையை, மிக்க செல்வங்களால் நிறைந்த மனமகிழ்வுடையவர் வாழும் சிவபுரநகரின் மன்னனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள், கலைமகள், சயமகள், அவர்க்கு இனமான புகழ்மகள் ஆகியோர் தம்பால் பொருந்த, பெரிய இவ்வுலகின்கண் இனிதாக வாழ்வர்.


குறிப்புரை :
இது பயன்கூறித்திருக்கடைக்காப்பருளுகிறது. தனமிகு மனர் - செல்வம் மிகுந்த மனத்தையுடையவர். சிரபுரம் - சீகாழி, இப்பதிகத்தைப் பரிவொடு பயில்வார் திருமகள் கலைமகள் வெற்றிமகள் புகழ்மகள் பொருந்தப் பூமியில் நீடுவாழ்வார் என்பதாம்.

நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழா இருபத்தினாங்காவதுநாள் - 2011 தேர் திருவிழா


திருவீழிமிழலை


Friday 26 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருக்கழுமலம்

பாடல் எண் : 1
பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவள் இணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழினிறை வயலணி கழுமல மமர்கன லுருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு நலமலி கழல்தொழன் மருவுமே.


பொழிப்புரை :
பிறை அணிந்த விரிந்த சடைமுடியின்கண் பெருகிவந்த கங்கையை உடைய இறைவனும், முன்கையில் அழகிய வளையலை அணிந்த உமையம்மையின் இரண்டு தனபாரங்களோடு இணைபவனும், அழகிய இடவகைகளில் ஒன்றான நிழல்மிக்க பொழில்கள் நிறைந்ததும் நெல்வயல்கள் அணி செய்வதுமாகிய திருக்கழுமலத்தில் எழுந்தருளியுள்ள அழல் போன்ற சிவந்த மேனியனுமாகிய சிவபிரானின் தேன்நிறைந்த மலர்களின் நறுமணம் செறிந்த அழகிய திருவடிகளைத் தொழுதல் செய்மின்கள்.


குறிப்புரை :
இறை - முன் கை. இணை முலையவள் இணைவனது- பரஞானம் அபரஞானம் என்ற இரண்டு முலைகளையுடைய உமாதேவியோடு இணைபவனாகிய சிவனது. கறையணிபொழில் - நிழல் மிக்க பொழில். நறையணிமலர் - தேனோடுகூடிய அழகிய மலர். உலகீர்! இடமாகிய கழுமலம் அமர் கனல் உருவினனது கழல் தொழுதலை மருவும் எனக்கூட்டுக. மருவும் - பொருந்துங்கள்.


பாடல் எண் : 2
பிணிபடு கடல்பிற விகளறல் எளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமல மினிதமர் அனலுரு வினனவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை யுமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநலம் மலிகழ லிணைதொழன் மருவுமே.


பொழிப்புரை :
இடைவிடாமல் நம்மைப் பிணிக்கும் கடல் போன்ற பிறவிகள் நீங்குதல் எளிதாகும். அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும், உமையம்மையின் மணாளனும், நீலமணிபோலும் நிறத்தினை உடைய கறைக்கண்டனும் ஆகிய சிவபிரானின் நலம் நிறைந்த திருவடிகளைத் தொழுதல் செய்மின்.


குறிப்புரை :
பிணிபடுகடல் பிறவிகள் - ஆதி ஆன்மிகம் முதலிய பிணிகளோடு தொடக்குண்ட கடல் போன்ற பிறவிகள். தன்னகப்பட்டாரை மீளவிடாதே மேலும் மேலும் பிணிக்கின்ற பிறவிக்கடல் என்றுமாம். அறல் - நீங்குதல். அது பெருகிய திரை உளது - அப் பிறவிக்கடல் மிகப் பெருகுகின்ற அலைகளையுடையது. அனல் உருவினனாகிய மதிபுனைவனை, உமைதலைவனை, கறைமிடறனை, கழலிணை தொழல் மருவும் எனக் கூட்டுக. புனைவன் - சூடுபவன். நிறமணி படும் கறை மிடறன் - ஒளிபொருந்திய நீலமணிபோலும் விடம்பொருந்திய கழுத்தினையுடையவன். நலம் - வீட்டின்பம்.


பாடல் எண் : 3
வரியுறு புலியத ளுடையினன் வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புரைபொழில் விழவொலி மலிகழு மலமமர்
எரியுறு நிறவிறை வனதடி யிரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை யிருள்கெட நனிநினை வெய்துமதே.


பொழிப்புரை :
கோடுகள் பொருந்திய புலியின் தோலை ஆடையாக உடுத்தவனாய், ஒளி மிக்குத்தோன்றும் கிரணங்களையுடைய வளர்பிறையை அணிந்த சடையை உடையவனாய், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் திருவிழாக்களின் ஒலி நிறைந்ததும் ஆகிய கழுமலத்துள் அழல் வண்ணனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை, இரவும் பகலும் பரவுகின்றவர்களின் வருத்துகின்ற வினைகள் மிக்க ஒளியை உடைய ஞாயிற்றின் முன் இருள் போலக் கெட்டொழியும். ஆதலால், அப்பெருமான் திருவடிகளை நன்றாக நினையுங்கள்.


குறிப்புரை :
வரியுறுபுரி அதள் - கோடுகள் பொருந்திய புலித்தோல். வளர்பிறையையும் கதிரையும் பொதிந்த விரியுறுசடையையுடைய இறைவன், கழுமலம் அமர் இறைவன் எனத் தனித் தனிக் கூட்டுக எரியுறு நிற இறைவன் - தீவண்ணன். பரவுவர் தமது நினைவெய்தும் எனக் கூட்டுக. எரியுறுவினை - வருத்துகின்ற நல்வினை தீவினைகள். கதிர் முனை இருள் - ஒளிப்பொருளாகிய சூரியனையும் வெறுத் தோட்டுகின்ற இருள் என்றது ஆணவமலம் என்றவாறு. நனி நினைவெய்தும் - தயிலதாரை போல இடைவிடாது இறைவன் நினைப்பெய்தும்.


பாடல் எண் : 4
வினைகெட மனநினை வதுமுடி கெனில்நனி தொழுதெழு குலமதி
புனைகொடியிடைபொருள் தருபடு களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலமமர் கதிர்மதி யினனதிர் கழல்களே.


பொழிப்புரை :
உயர்ந்த பிறை மதி, கொடிபோன்ற இடையையுடைய கங்கை, மந்திரப் பொருளால் உண்டாக்கப்பட்டுத் தோன்றிய யானையின் தோல் இவற்றை உடைய உடலினனும், வீட்டுக் குடம் போலும் வயிற்றினை உடைய பூதங்கள் சிலவற்றின் படையை உடையவனும், ஆரவாரம் நிறைந்த கடற்கரையை அடுத்த கழுமலத்துள் ஞாயிறு திங்கள் ஆகியவற்றைக் கண்களாகக் கொண்டு அமர்ந்தவனுமாகிய சிவபெருமானின் ஒலிக்கும் கழற் சேவடிகளை, வினைகள் கெடவும் மனத்தில் நினைவது முடியவும் வேண்டின் நன்கு தொழுதெழுக.


குறிப்புரை :
குலமதிபுனை - உயர்ந்த பிறைமதியை அணிந்த கொடியிடை - சுற்றிக் கொண்டிருக்கின்ற காட்டுக் கொடிகளினிடையே. பொருள்தருபடுகளிறினது - பல பொருள்களைக் கொண்டு வருகின்ற இறந்த யானையினது. உரி - தோல். இவருடைய மேனியின் செவ்வொளியைக் களிற்றின் கருந்தோல் புதைத்தது என்பதாம். மனைகுட வயிறு உடையன குறள் படை -வீட்டுக்குடம்போன்ற வயிறு உடையனவாகிய பூதப்படைகள். கதிர் மதியினன் - சூரியனையும் சந்திரனையும் தமது திருக்கண்களாகப் படைத்தவன். உடலினன், உடையவன், மதியினன், கழல்கள். வினைகெட மனநினைவது முடிகெனின், நனிதொழுது எழு எனக்கூட்டுக. மனநினைவிற்கு எல்லாம் காரணமாகிய வினைகள் கெடவும், மனம் நினைந்தது நிறைவேறவும், விரும்பின், கழல்களைத் தொழுதெழு என்று நெஞ்சை நோக்கி அறிவித்தவாறு. முடிக எனின் என்பது முடிகெனின் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. முடியுமாயின் எனப் பொருள் காண்பதும் உண்டு. பொருந்துமேல் கொள்க.


பாடல் எண் : 5
தலைமதி புனல்விட வரவிவை தலைமைய தொருசடை யிடையுடன்
நிலைமரு வவொரிட மருளின னிழன்மழு வினொடழல் கணையினன்
மலைமரு வியசிலை தனின்மதி லெரியுண மனமரு வினனல
கலைமரு வியபுற வணிதரு கழுமல மினிதமர் தலைவனே.


பொழிப்புரை :
நல்ல கலைமான்கள் பொருந்திய சிறுகாடுகள் புறத்தே அழகு பெறச் சூழ்ந்துள்ள கழுமலத்தில் இனிதாக எழுந்தருளிய இறைவன், ஒரு நாட்பிறை, கங்கை, நஞ்சு பொருந்திய பாம்பு ஆகியவற்றுக்குத் தன் தலைமையான சடைக் காட்டின் நடுவில் ஒன்றாக இருக்குமாறு இடம் அருளியவன். ஒளி பொருந்திய மழுவோடு அழல் வடிவான அம்பினை மேருமலையாகிய வில்லில் பூட்டி எய்தலால் திரிபுரங்கள் எரியுண்ணுமாறு மனத்தால் சிந்தித்தவன்.


குறிப்புரை :
இடமருளினன், கணையினன், மருவினன் தலைவன் எனப் பொருந்த முடிக்க, தலைமதி - ஒருநாட் பிறை. தலைமையது ஒரு சடைஇடை - தலைமையதாகிய சடைக்காட்டின் நடுவில். பகைபட்டபொருளாகிய மதி அரவு இவைகளைப் பகை நீங்கி வாழ ஓரிடத்து அருளினன் என்பது குறித்தவாறு. நிழல் மழு - ஒளிவிடுகின்ற மழு. மலை மருவிய சிலைதனில் - மேருமலையாகிய வில்லில். மதில் - முப்புரங்கள். மனம் மருவினன் - மனம் பொருந்தினன். நலகலை மருவிய புறவு - நல்லகலைமான்கள் பொருந்திய சிறுகாடு. புறவம் என்ற தலப்பெயர்க் காரணம் புலப்படும்.


பாடல் எண் : 6
வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய கழுமல மமர்கன லுருவினன்
அரைபொரு புலியத ளுடையினன் அடியிணை தொழவரு வினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட வுயருல கெய்தலொரு தலைமையே.


பொழிப்புரை :
மலைகளைப் பொருது இழிகின்ற அருவிகள் பலவற்றைப் பருகுகின்ற பெரிய கடலினை அடுத்துள்ளவரிகளாக அமைந்த மணற் பரப்பில் அமைந்ததும், கரையைப் பொரும் கடல் அலைகளின் ஒசை எப்போதும் கேட்கின்றதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளியுள்ளவனும், கனல் போலும் சிவந்த திருமேனியனும், இடையிலே கட்டிய புலித்தோலை உடையவனுமாகிய சிவபிரானின் இணை அடிகளைத் தொழின், போக்குதற்கு அரியனவாகிய வினைகள் என்னும் வார்த்தையும் பொடிபட, மிக்க துயர்கள் நீங்க உயர்ந்த உலகமாகிய வீட்டுலகத்தைப் பெறுதல் நிச்சயமாகும்.


குறிப்புரை :
கழுமலத்தில் எழுந்தருளியுள்ள தீவண்ணப் பெருமானின் திருவடியைத் தொழ, வினையென்னும் சொல்லும் பொடிபட உயர்ந்த உலகத்தையடைதல் துணிபு என்கின்றது. அருவிகள் பல பருகு ஒருகடல் -பல அருவிகளைப் பருகுகின்ற பெரியகடல். திரை ஒலி கெழுமிய கழுமலம் - அலையோசையோடு எப்பொழுதும் கூடியிருக்கிற சீகாழி. உரையும் பொடிபடவே அதன் பொருளாகிய வினைபொடிபடுதல் சொல்லாமலேயமையும் என்பதாம்.


பாடல் எண் : 7
முதிருறி கதிர்வள ரிளமதி சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை யுடைபுலி யதளிடை யிருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமல மமர்மழு மலிபடை
அதிருறு கழலடி களதடி தொழுமறி வலதறி வறியமே.


பொழிப்புரை :
மலர்கள் சூடுவதால் தேன் நிறைந்துள்ள திருமுடியில் உலகிற் பயிர்களை முதிர்விக்கும் கிரணங்கள் வளர்கின்ற மதியைச் சூடிய சடையை உடையவனாய், உதிரத்தக்க மயிர் பிணைந்து தசை தவிர்ந்துள்ள புலித்தோலை உடுத்த இடையை உடையவனாய், இருளை நீக்கும் கதிரவனின் சுடரொளி பொருந்திய மழுவாகிய படையை ஏந்திக் கழுமலத்துள் அமர்கின்ற பெருமானின் கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொழும் அறிவல்லது பிறவற்றை அறியும் அறிவை அறியோம்.


குறிப்புரை :
நற நிறை தலைதனில் - தேனிறைந்த திருமுடியில். முதிர் உறுகதிர் வளர் இளமதி - முதிர்ச்சியடையும் கதிர்கள் வளரும் இளைய ஒருகலைப் பிறைச் சடையையுடையவனை; உதிர் உறு மயிர்பிணை - உதிரத்தக்க மயிர்கள் உதிராதே பிணைந்திருக்கும், தவிர்தசையுடை புலியதள் - கழன்ற தசையையுடைய புலித்தோலை உடுத்த. இடை - இடையினையுடையவனை. இடை என்பது உடையானைக் காட்டி நின்றது. படையையும் கழலையும் உடைய அடிகள். அடிகளின் திருவடியைத்தொழும் அறிவல்லது பிறவற்றையறியோம் என்று உறைத்த திருத்தொண்டைக் கூறியருளியவாறு.


பாடல் எண் : 8
கடலென நிறநெடு முடியவன் அடுதிறல் தெறவடி சரணென
அடனிறை படையரு ளியபுகழ் அரவரை யினனணி கிளர்பிறை
விடநிறை மிடறுடை யவன்விரி சடையவன் விடையுடை யவனுமை
உடனுறை பதிகடல் மறுகுடை யுயர்கழு மலவிய னகரதே.


பொழிப்புரை :
கடல் போன்ற கரிய நிறத்தினனும், நீண்ட முடியை அணிந்தவனும் ஆகிய இராவணனின் வலிமை கெடுமாறு செய்து பின் அவன் திருவடிகளே சரண் என வேண்ட அவனுக்கு வலிமை மிக்கவாட்படை அருளிய புகழுடையவனும், பாம்பை இடையில் கட்டியவனும், அழகுமிக்க பிறையை அணிந்தவனும், விடம் தங்கிய கண்டத்தை உடையவனும், விரித்த சடையை உடையவனும், விடை ஊர்தியனும் ஆகிய பெருமான் உமையம்மையோடு உறையும் பதி, கடல் அலைகளையுடைய உயர்ந்த கழுமலம் எனப்படும் பெரிய நகராகும்.


குறிப்புரை :
கடல் என நிறநெடு முடியவன் - கடலை ஒத்த நிறத்தையுடைய நீண்ட கிரீடத்தையணிந்தவனாகிய இராவணன். அடுதிறல் தெற - பிறரை வருத்தும் வலிமை தொலைய என்றுமாம். அடி சரண் என - திருவடியே அடைக்கலமாவது என்று கூற. அடல் நிறை படை - கொலை நிறைந்த படையாகிய சந்திரகாசம் என்னும் வாள். அரவு அரையினன் - பாம்பை இடுப்பிலணிந்தவன். கடல் மறுகு உடை - கடலுங் கலங்குதலை உடையகாலத்து.


பாடல் எண் : 9
கொழுமல ருறைபதி யுடையவன் நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமல மமர்கன லுருவினன் அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையுமிலநில வகைதனில் எளிதிமை யவர்விய னுலகமே.


பொழிப்புரை :
செழுமையான தாமரை மலரை உறையும் இடமாகக் கொண்ட பிரமன், திருமால் ஆகிய இவர்களும் சிவபெருமானது சிறப்பைச் சிறிதும் அறியார். அப்பெருமான், மணம் பொருந்திய பொழில்கள் சூழப் பெற்றதும் அழகிய விழாக்கள் பல நிகழ்வதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளிய அழல் உருவினன். அப்பெருமானுடைய திருவடி இணைகளைத் தொழுபவர்களின் நீங்குதற்கரிய வினைகள் இப்பூவுலகில் ஏழு பிறப்பின்கண்ணும் இலவாகும். இமையவர்களின் பெரிய உலகத்தை அடைதல் அவர்கட்கு எளிதாகும்.


குறிப்புரை :
கொழுவிய தாமரைமலரை உறையுமிடமாக உடைய பிரமன். நெடியவன் - திருமால். அவன் - சிவன். விழுமை - பெருமை. இறையளவு அறிகிலர் எனவும். நிலவகைதனில் வினை எழுமையும் இல. இமையவர் வியன் உலகம் எளிது எனவும் இயைத்துப் பொருள்காண்க.


பாடல் எண் : 10
அமைவன துவரிழு கியதுகில் அணியுடை யினரம ணுருவர்கள்
சமையமு மொருபொரு ளெனுமவை சலநெறி யனவற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமமர் இறைவன தடிபர வுவர்தமை
நமையல வினைநல னடைதலில் உயர்நெறி நனிநணு குவர்களே.


பொழிப்புரை :
தமக்குப் பொருந்துவனவாகிய மருதந்துவர் ஊட்டின ஆடையை அணிந்தவர்களாகிய புத்தர்களும், ஆடையற்ற சமணர்களும் ஒரு பொருள் எனக்கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் ஆகிய அவைவஞ்சனை மார்க்கத்தை வகுப்பன என உணர்ந்து தேவர்களால் தொழப்படுகின்ற கழுமலத்துள் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் பரவுவார்களை வினைகள் வருத்தா. நலன் அடைதலின் உயர்நெறிகளை அவர்கள் அடைவார்கள்.


குறிப்புரை :
அமைவன - பொருந்துவனவாகிய. துவர் இழுகிய துகிலினர் - மருதந்துவர் ஊட்டின ஆடையராகிய புத்தர். அமண் உருவர்கள் - சமணர்கள். ஒருபொருளெனும் சமயமும், அறவுரைகளும் ஆகிய அவை சலநெறியன - மேற் கூறிய புத்தரும் சாக்கியரும் ஒரு பொருளாகக் கூறும் சமயங்களும், அவற்றில் அவர்கள் கூறும் தர்மோபதேசங்களும் ஆகிய அவைகள் வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன. நமையல - வருத்தா. `நமைப்புறுபிறவிநோய்` என்னும் சூளாமணிப் பகுதியும் இப்பொருட்டாதல் காண்க. `நும்மால் நமைப்புண்ணேன்` என்ற அப்பர் வாக்கும் நினைவுறத்தக்கது. வினை நலன் அடைதலின் நமையல நனி உயர்நெறி நணுகுவர்கள் என இயைக்க.


பாடல் எண் : 11
பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை கழுமல முறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே.


பொழிப்புரை :
பரந்துபட்ட நூல்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை ஆழ உணர்ந்தவனும், மிக்க புகழாளனும் ஆகிய ஞான சம்பந்தன் நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய அன்பு பிணைந்த இப்பத்துப் பாடல்களையும் ஓதி மனம் பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்லூழும் உடையவராவர்.


குறிப்புரை :
தமிழ் விரகினனாகிய பெயரவன் பரவிய மொழிகள் பத்தும் மருவிய மனம் உடையவர் மதியுடையர் விதியுடையவர்கள் எனக் கூட்டுக. மலிபெயரவன் - நிறைந்த புகழ் உடையவன். உறை பிணர் திரையொடு - நீர்த்துளிகளோடு மடங்குகின்ற அலைகளோடு. பிணைமொழியன - அன்பு பூட்டிய மொழிகள்./n குருவருள்: இப்பதிகம் ஒருபது பாடல்களையும் மருவிய மனம் உடையவர், நன்மதியுடையவராவர். அவர் நல்விதி உடையவரும் ஆவர். எனவே, இறைநெறி சேராதார் நல்மதியும் நல்விதியும் உடையவராகமாட்டாராய் இடர்ப்படுவர் என்பது குறிப்பெச்சம்.

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருநின்றியூர்

பாடல் எண் : 1
சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்னிலை யோர்க்கே.


பொழிப்புரை :
முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி, மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும், சாந்தமும், திருநீறே. பால் போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் சடை முடியின் மேலது.

குறிப்புரை :
காலன் வலிபோக்கி, நின்றியூரின் நிலையோர்க்கு, சூலம் படை, சுண்ணப்பொடி, சாந்தம், சுடுநீறு, மதி முடிமேலது என்க. நிலையோர் - நிலைபெறுதலையுடையார். சுண்ணப்பொடியும் சாந்தமும் நீறேயாம், பால் அம்மதி - பால்போலும் அழகிய மதி, அம்தவிர்வழி வந்த சாரியையுமாம். பண்டைக்காலன் என்றது இப்போது சிவனடியார்மேல் செல்லும் முனைப்பற்று இருக்கின்ற நிலையை உளத்தடைத்து.


பாடல் எண் : 2
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.

பொழிப்புரை :
நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.

குறிப்புரை :
நின்றியூரில் அடிகள் திருப்பாதம் பணியும் அடியார் அச்சமுதலாயின இலராவர் எனக் கூட்டுக. அச்சம் இலர் என்றது தமக்கு உறுதுணையாவார் ஒருவரைப் பெற்றமையால். இந்நிலையை அப்பர் சுவாமிகளும் `சுண்ணவெண் சந்தனச்சாந்தும்` என்னும் பதிகத்து `அஞ்சுவதுயாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை` என்றமை காண்க. பாவம் இலர் - பிராரத்த நுகர்ச்சிக் கண்ணும் இவர்கள் இது செய்தார்யானிது செய்தேன் என்னும் தருக்கதின்றிச் செய்வார்கள் ஆதலின் மேல்வினைக்கு வித்துமாகும்./n பாவம் இலர். கேடும் இலர் - அவ்வினை காரணமாக வரும் கேடும் இலராவர். நிச்சம் - நித்யம். நோய் - துன்பங்கள். நச்சம் - நஞ்சு. அம் சாரியை. நறுங்கொன்றை நயந்து - மணம் பொருந்திய கொன்றைப்பூவை விரும்பி, ஆளும் - அதனை விரும்பி அன்போடு சாத்தும் அடியார்களை ஆளுகின்ற. பச்சம் உடை அடிகள் - பட்சமுடைய பெருமான். பச்சம், பக்ஷம் என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.


பாடல் எண் : 3
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதென துள்ளம் உணராதே.


பொழிப்புரை :
பறையடிக்கும் ஒலி, சங்கு முழங்கும் முழக்கம், பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாததத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது.


குறிப்புரை :
பாங்குஆரவும் - பக்கங்களில். மிகவும் - அறையும் ஒலி மிக அடித்தலால் உண்டாகும் (ஏனைய) ஒலிகள். இவை தோற்கருவி ஒலிகள். அறிவார் அடிகள் இறை அவர் தன்மையல்லது உள்ளம் உணராது என முடிக்க. எங்கும் அவையறிவார் - எவரும் அவ்வொலியினை அறிபவர், என் உள்ளம் உணராது என்பது எங்குங்காண்பது அவனுருவே ஆதலின்.

பாடல் எண் : 4
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.

பொழிப்புரை :
அணிகலன்களைப் பூண்ட மலைபோன்ற மார்பில் முப்புரிநூலை அணிந்து, விரிந்த கொன்றை மலர் மாலையையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும் சூடி, வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி, நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத்தொழுதல் அல்லது, அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.


குறிப்புரை :
பூண்டவரை மார்பு - அணிகளைப்பூண்ட மலை போலத் திண்ணிய மார்பு. பூண்டவ்வரை - விரித்தல் விகாரம். ஈண்ட - செறிய. கொன்றை./nஈண்ட மதி அதனைத் தீண்டும் பொழில் சூழ்ந்த திருநின்றி எனக் கூட்டுக. திருவடியைத் தொழுதாலல்லது அவர் அறிவான் அறியார் என ஆன்மாக்கள் அருளே கண்ணாகக் காணும் ஆற்றல் விளக்கியவாறு.

பாடல் எண் : 5
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வல னங்கையது வேந்தியன லாடும்
கழலின்னொலி யாடும்புரி கடவுள்களை கண்ணே.

பொழிப்புரை :
குழலிசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும், நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை வலத்திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக்களைகண் ஆவான்.

குறிப்புரை :
பாடுவாரைப் பார்த்து மற்றவர்க்கும் பாடத்தோன்றுவதுபோலக் குழலிசையும் வண்டிசையும் கேட்டுக் குயில் கூவுகின்றன. நிழலின் எழில் தாழ்ந்த பொழில் - ஒளியும் நிழலும் விரவித் தோன்றும் நிலை சித்திரப்பூம்படாம் விரித்தது போலுமாகலின் நிழலின் எழில் தாழ்ந்த பொழில் என்பர்./n அழலின் வலன் - வலமாகச் சுற்றியெரியும் மழு. ஆடும்புரிகடவுள் - ஆடுகின்ற விரும்பத்தக்க கடவுள். களைகண் - நமக்கு ஆதாரம்.

பாடல் எண் : 6
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
சாரன்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
யூரன்கழ லல்லாதென துள்ளம்முண ராதே.

பொழிப்புரை :
புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது.

குறிப்புரை :
மூரல் முறுவல் - மிகச் சிறிய புன்சிரிப்பு, சலவம் - கங்கை. கழலைப்பற்றிய உள்ளத்திற்கு, வேறொன்றையும் உணர முடியாமையானும் உணர்ந்து ஆகவேண்டுவது இன்மையானும் உள்ளம் உணராது என்றார்.

பாடல் எண் : 7
பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்னிலை யாரே.

பொழிப்புரை :
பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும் இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறை மதியைச் சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளியுள்ளார்.


குறிப்புரை :
தலை கையினில் பற்றி ஏந்தித் தேரும் பெற்றியதுவாகியே திரிகின்ற தேவர் பெருமானார் என இயைக்க. பலி பெற்றியதுவாகி எனவே அப்பெற்றி அவர்க்கு இயல்பன்மையும், தாருகாவனத்து முனிவர்கள்பால் வைத்த தடையிலாக்கருணையே காரணம் என்பதும் வெளிப்படை, சுற்றி - அரையைச் சுற்றி. வேங்கை - புலித்தோல்.

பாடல் எண் : 8
இப்பாடல் கிடைக்கவில்லை

பொழிப்புரை :
இப்பாடல் கிடைக்கவில்லை


குறிப்புரை :
இப்பாடல் கிடைக்கவில்லை

பாடல் எண் : 9
நல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
அல்லரென வாவரென நின்றும்மறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரின்னிலை யாரெம்
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.

பொழிப்புரை :
நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனோடு உலகைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டிய திருமாலும், சிவபிரானே முழுமுதற் பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக்கொண்டு தேடிக் காணுதற்கரியவராய் நின்றவரும் நெல்வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எம் செல்வருமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லது என் சிந்தை வேறொன்றையும் உணராது.

குறிப்புரை :
நல்ல மலர் நல்லம்மலராயிற்று. மலர்மேலான்பிரமன். ஞாலமது உண்டான் திருமால். அல்லர் என ஆவர் என தலைவர் அல்லர் எனவும் தலைவர் ஆவர் எனவும் தாமே தருக்கி நின்று.


பாடல் எண் : 10
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.


பொழிப்புரை :
சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற்பொருளை அறியும் அறிவற்ற சமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும், தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச்சமயிகளின் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்தியகையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்.


குறிப்புரை :
நெறியில் வரும் - தொன்றுதொட்டுக் குரு காட்டிய நெறியினின்று பயில்வதால் வருகின்ற. பேராவகை நினையா நினைவொன்றை அறிவில் சமண் ஆதர் - பேராதே மறவாதே தன்மயமாய் இருந்து நினைக்கப்படும் ஒருபொருளை அறியும் அறிவு அற்ற சமணர்களாகிய கீழ்மக்கள். மயராது - மயங்காது. நெறியில்லவர் - தமக்கென்று உண்மை நெறியில்லாதவர்களாகிய புறச்சமயிகள். குறிகள் - அடையாளங்கள். மறி - மான்.

பாடல் எண் : 11
குன்றம்மது வெடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தானின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.

பொழிப்புரை :
கயிலைமலையை எடுத்த இராவணனின் உடல் தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்.

குறிப்புரை :
உற - பொருந்த. ஞானம்மிகுபந்தன் - ஞானசம்பந்தன். இச்சொல் ஞானசம்பந்தன் என்பதற்குப் பொருள் காட்டியது போலும். குன்றாத்தமிழ் - எஞ்ஞான்றும் திருவருள் குறையாத தமிழ்.