கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருவலிதாயம்

பாடல் எண் : 7
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர்வீட்டிப்
பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய பெம்மானுறைகோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலிதாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் முண்மைக்கதியாமே.

பொழிப்புரை :

வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க. நெற்றி விழியின் அழலால், தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனியின் பெண்ணிறைந்த இடப் பாகத்தால் மகிழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய் நிலவுலகெங்கும் நிறைந்த புகழைக்கொண்ட, அடியவர்கள் வணங்கும் திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம்.

குறிப்புரை :

இஃது ஆன்மாக்கள் என்றும் அடையத்தகும் கதியாகிய வீட்டின்பத்தை வலிதாயநாதன் கழல் ஏத்த அடையலாம் என்கின்றது. கண் நிறைந்த விழி - கண்ணாகிய உறுப்பு முழுவதும் வியாபித்திருக்கின்ற விழி. அன்றியும் கண் நிறைந்த அழல் எனவும் கூட்டலாம். வருகாமன் - தேவ காரியத்தை முடிப்பதற்காக இந்திரன் கோபத்திற்காளாகி இறப்பதைக்காட்டிலும் சிவபெருமான் மறக் கருணையால் உய்வேன் என்று விரும்பிவந்த காமன். வீட்டி - அழித்து. உயிர் வீட்டி என்றது நித்தியமாகிய உயிரை அழித்ததன்று, அதனைத் தன்னகத் தொடுக்கி, உண்மைக் கதி - என்றும் நிலைத்த முத்தி.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.