கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday, 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 4

நாகப ணந்திக ழல்குன்மல்கு நன்னுதன் மான்விழி மங்கையோடும்
பூகவ னம்பொழில் சூழ்ந்தவந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மா னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.


பொழிப்புரை :

பாம்பின் படம் போன்று திகழும் அல்குலையும், அழகு மல்கும் நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய பார்வதிஅம்மையுடன் வளமான கமுகஞ்சோலைகள் சூழ்ந்து விளங்கும் அழகும் தண்மையும் உடைய சீகாழிப் பதியில் விளங்கும் புண்ணியனே! தன்னொப்பார் இன்றித் தானே முதலாய பெருமானே! எம் தலைவனே! மேகங்கள் தோயும் மதில்கள் சூழ்ந்த திருவீழி மிழலையில் விண்ணிழி விமானக் கோயிலை விரும்பியது ஏன்! சொல்வாயாக.


குறிப்புரை :

புண்ணியனே! எம் இறையே! விண்ணிழிகோயில் விரும்பியது என்கொல் சொல்லாய் எனக் கூட்டுக.நாகபணம் - பாம்பின் படம். அல்குலையும், நன்னுதலையும், மான்விழியையும் உடைய மங்கை எனக்கூட்டுக. பூகவனம் - கமுகந்தோட்டம். புகலி -சீகாழி,ஏகபெருந்தகை பெருந்தகுதியால் தன்னொப்பார் பிறரின்றித் தான் ஒருவனே பெருந்தகையானவன். பெம்மான் - பெருமான் என்பதன் திரிபு. உரிஞ்சு - தோய்ந்த.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.