கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday, 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 2

கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே
எழின்மலரோன்சிரமேந்தியுண்டோரின்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

மகளிர்க்குப் பொருந்திய கழங்கு, பந்து, அம்மானை, முற்றில் ஆகிய விளையாட்டுகளைக் கற்ற சிற்றிடைக் கன்னிமார்கள், சோலைகளில் தங்கியுள்ள கிளிகட்குச் சொற்களைக் கற்றுக் கொடுத்துப் பேசச் செய்யும் திருப்புகலியில் விளங்கும் புண்ணியனே! அழகிய தாமரை மலரில் விளங்கும் பிரமனது தலையோட்டில் பலியேற்றுண்டு இன்புறும் செல்வனே! திருவீழிமிழலையில் வேதியர்கள் போற்றித் துதிக்க விண்ணிழி கோயிலை நீ விரும்பியதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக!

குறிப்புரை :

கழல், பந்து, அம்மானை, முற்றில் முதலிய மகளிர் விளையாட்டுப் பொருள்கள் குறிக்கப் பெறுகின்றன. கழல் - கழற்சிக்காய். முற்றில் - முச்சி (சிறுசுளகு), கன்னியர், சோலையிலுள்ள கிளிகட்குச் சொல் கற்றுக்கொடுக்கும் புகலி. எழில் - அழகு. மலரோன் - பிரமன். ஓர் - அசை. விண்ணிழிகோயில் - வீழிமிழலையிலுள்ள கோயிலின் பெயர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.