கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 1

மைம்மரு பூங்குழற் கற்றைதுற்ற வாணுதன் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்க ணீசவெ னேசவி தென்கொல்சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு, பொய் பேசாத அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும் புண்ணியம் திரண்டனைய வடிவினனே, எம் தலைவனே! இமையாத முக்கண்களை உடைய எம் ஈசனே!, என்பால் அன்பு உடையவனே, வாய்மையே பேசும் நான்மறையை ஓதிய அந்தணர் வாழும் திருவீழிமிழலையில் திருமாலால் விண்ணிலிருந்து கொண்டுவந்து நிறுவப்பட்ட கோயிலில் விரும்பியுறைதற்குரிய காரணம் என்னையோ? சொல்வாயாக!

குறிப்புரை :

மை மரு - கருமை சேர்ந்த. பொய்மொழியா மறையோர்கள் - என்றும் பொய்யே சொல்லாத வேதியர்கள். புகலி - சீகாழி. நேச - அன்புடையவனே. மெய் மொழி நான்மறை - என்றும் நிலைத்த மொழியினையுடைய நான்கு வேதம். மங்கையோடும் நிலாவிய, ஏத்த நிலாவிய புண்ணியன் எனக்கூட்டுக.


குருவருள்: `
பொய் மொழியா மறையோர்` என்று காழி அந்தணர்களை எதிர்மறையால் போற்றிய ஞானசம்பந்தர் `மெய்ம்மொழி நான்மறையோர்` என வீழி அந்தணர்களை உடன்பாட்டு முகத்தால் கூறியுள்ள நுண்மை காண்க.`பொய்யர் உள்ளத்து அணுகானே` என்ற அருணகிரிநாதர் வாக்கினையும் இதனோடு இணைத்து எண்ணுக. சீனயாத்திரீகன் யுவான்சுவாங் என்பவன் தனது யாத்திரைக் குறிப்பில் பொய், களவு, சூது, வஞ்சகம் இல்லாதவர்கள் என இந்தியரின் சிறப்பைக் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாம். ஞானசம்பந்தர் காலமும் யுவான்சுவாங் காலமும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆகும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.