கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 3
கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியன் மாட நெருங்குசெல்வப் புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசையாழ்மொழியாளோர்பாகத்தெம்மிறையேயிதுவென்கொல்சொல்லாய்
மின்னிய னுண்ணிடை யார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.


பொழிப்புரை :

கன்னிப் பெண்கள் விளையாட்டை விரும்பிப் பந்தாடுதற்குரிய தெருக்களில் கூடியாட உயர்ந்த பொன்னிறமான அழகுடன் விளங்கும் மாடங்கள் நெருங்கும் செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! யாழினது இனிய இசைபோலும் மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட எம் தலைவனே! மின்னல் போன்ற நுண்ணிய இடையினை உடைய அழகிய மகளிர் மருவும் திருவீழிமிழலையில் விண்ணிழி விமானத்தை நீ விரும்பியதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!

குறிப்புரை :

கன்னியர், விளையாட்டை விரும்பிப் பந்தாடுதற்குரிய வீதியில் கலந்து மாடங்களில் நெருங்குகின்ற செல்வப் புகலி எனக்கூட்டுக. கந்துகம் - பந்து. துங்கம் - உயர்ச்சி. மின் இயல் - மின்னலைப் போலும் இயல்பினையுடைய. யாழ் இன்னிசை மொழியாள்-யாழினது இனிய இசைபோலும் மொழியினை உடையாள். புகலியும் கன்னியர் பந்தாடுதற்குரிய வீதிகள் மாடங்கள் நெருங்கும் இயல்பினது; வீழியும் மின்னியல் நுண்ணிடையாரையுடையது; அங்ஙனமாகத் தேவரீர் வீழியை விரும்பியது ஏன்? என்றதில் நயம் காண்க.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.