திருஞானசம்பந்தர் தேவாரம்
திருப்பிரமபுரம்
பாடல் எண் : 1
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பொழிப்புரை :
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே
உடையவனாய், விடைமீது ஏறி, ஒப்பற்ற சுடுகாட்டில் விளைந்த சாம்பற்
பொடியை உடல் முழுதும்பூசி வந்து என் தூயவெண்மையான பிறையை
முடிமிசைச்சூடி, உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய
தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி
முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமைமிக்க
பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகியஇவன் அல்லனோ!
குறிப்புரை :
தோடுடைய செவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனு
டைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாரு
டைய அழுகைக்குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச்
செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார்.
உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல்
பரமனார் திருச்செவியில் சென்று சேர, செவியை முதற்கண்
சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச்சிறப்பித்து` என்ற
சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையதிருச்செவி என்ற
தால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. தோடு
கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால்
இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூப
சிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து
மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும்
முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும்
குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர்
தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.மூன்றுவயதுக் குழந்தை
யாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க
நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே
ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த
பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு.
விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி
.தூவெண்மதி-தூய்மையானவெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத்
தூய்மை களங்கமின்மை,இருள் ஒளியைச் சாராதவாறு போலக்களங்கம் இறைவனையும்,அவனருள்பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும்
வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம்
காணும் சந்திரன் போன்றுபிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்
தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்குஇடமில்லை
என்பதுமாம். இறைவன்சுடலைப்பொடிபூசுதல்: சர்வசங்கார காலத்து
எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள்
யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது.
மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப்
புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு
ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த
தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம்
என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது
விளங்குதலின்மலரான்என்பதுபிரமனைக் குறியாது என்றும் இந்நாயனாரே
முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றிஇங்ஙனம் கூறினார்
என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய
-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின்
இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன்
பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி,பூசி என்பன பெயர்ச்
சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின்
நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு. இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய
கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது
நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து
ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு
அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது
சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்`
என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும்
அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `
அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும்
ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.ஸ்ரீமத் செப்பறைச்
சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது
எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும்,
`பிரமாபுரம்` `விடையேறி`முதலியன இறைவனது தசாங்கங்களைக்
குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி`
`உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று
திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும்
குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறை
முதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய
ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகர வித்தையின்
அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து`தோ`என்று தொடங்கியதாகக்
குறிப்பிடுவார்கள் பன்னிரண்டாம்திருமுறையில் `உலகெலாம்` என்று
முடிவதனையும் இதனோடு சேர்த்துத்திருமுறை முழுவதுமே வேத
மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.தேவாரத்திற்கும்
வேதத்திற்கும்உள்ள ஒற்றுமையை உணர்த்த,வேதம் பயின்ற மரபில் வந்து
தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய
தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின்
முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய
ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.
குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே
உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒரு
தெய்வ வழிபாட்டை நிலை நிறுத்துகிறார் ஞானசம்பந்தர்.தோடுடைய
செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி
அருளுகிறார்.ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்
செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய
பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார்
போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த
அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்டநலங்
கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும்
விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு
அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்
பாடல் எண் : 2
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பொழிப்புரை :
வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!
குறிப்புரை :
இதனால் இறைவன் அணிகளைக் கொண்டு அடையாளங்கள் அறிவிக்கப் பெறுகின்றன. முற்றல் ஆமை - ஆதி கமடமாதலின் வயது முதிர்ந்த ஆமை. ஆமை என்றது ஈண்டு அதன் ஓட்டினை. இளநாகம் என்றது இறைவன் திருமேனியையிடமாகக் கொண்ட பாம்பிற்கு நரை திரையில்லையாதலின் என்றும் இளமையழியாதநாகம் என்பதைக் குறிப்பிக்க.ஏனம் - பன்றி; ஆதிவராகம். வற்றல் ஓடு - சதைவற்றிய மண்டையோடு. கலன் - பிச்சையேற்கும் பாத்திரம். பலி - பிச்சை, பெரியார்க்கிலக்கணம் கற்றலும் கேட்டலுமே என்பது. கற்றல் - உலக நூல்களை ஓதித் தருக்குவதன்று, இறைவன் புகழையே கற்று அடங்கல். கேட்டலும் அங்ஙனமே. இறைவன் புகழையன்றி வேறொன்றையுங்கல்லாத - கேளாத பெரியோர்களாலேயே இறைவன் தொழற்குரியன் என அதிகாரிகளையறிவித்தவாறு. `கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்` `கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை` என்பன ஒப்புநோக்கற்குரியன. `கற்றல் கேட்டலுடையார் பெரியார்` எனவே, உபலக்கணத்தால் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகூடல் முதலியனவும் கொள்ளப்பெறும். `கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்` என்பது சிவஞானசித்தியார். தமக்கு அருள் செய்தவண்ணமே தொழுதேத்தும் பெரியோர்க்கெல்லாம் அருள் வழங்கப் பெருமான் இடபத்தை ஊர்ந்தே இருக்கிறார் என்பதாம். பெற்றம் - இடபம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.