கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday, 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருப்பிரமபுரம்


பாடல் எண் : 8

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

வியர் இலங்கு தோள் - வியர்வை விளங்குகின்ற தோள். வியர் அகலம் எனவும் பொருள் கொள்ளலாம். இலங்கை அரையன் - இராவணன். அரையன் தோள்களை வலி செற்று என மாறிக்கூட்டுக. துயர் இலங்கும் உலகு - துன்பம் விளங்குகின்ற கன்மபூமி. இதனைத் துன்ப உலகு என்றது வினை வயத்தான் மாறித் துய்க்கப்படும் இன்ப துன்பங்களுள் இன்பக் களிப்பைக் காட்டிலும் துன்பக் கலக்கம் மிகுந்து தோன்றலின். பல ஊழி-பிரம ஊழி முதலிய பல ஊழிகள். இறைவன் பல ஊழிகளை விளைவிப்பது ஆன்மாக்களின் மலம் பரிபாக மாதற்பொருட்டு. பெயர் - புகழ்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.