கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday, 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலூர்

பாடல் எண் : 2

காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொருபாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரியாடை
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ்சோலைப்
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புகலூரே.

பொழிப்புரை :

காதில் விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் 
அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமை
யம்மை விளங்கும் திருமேனியன். யானையினது 
தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். 
அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம், 
சோலைகளில் தேனுண்ணும் விருப்பினால் வரி
வண்டுகள் இசைபாடும் புகலூராகும்.

குறிப்புரை :

ஒரு பாகம் மாது இலங்கும் திருமேனியன் என்பதால், 
காதிலங்கு குழையன் என்பதற்குப் பெண்பாதியில் 
காதில் விளங்கும் குழையை உடையவன் என்றும், 
ஆண்பாதியில் தளிரை உடையவன் என்றும் பொருள் 
கொள்க. குழை - பனந்தோட்டால் செய்யப்படும் மகளிர்
 காதணி; ஆடவர்காதில் செருகிக்கொள்ளும் மணத்தழை; 
இதனை வடநூலார் `கர் வதம்சம்` என்பர். இழைசேர்
 திருமார்பன் - பூணூல் சேர்ந்த, இழைத்ததங்க அணிகள் 
சேர்ந்த மார்பினையுடையவன். கருமான் -`கிருஷ்ண 
மிருகம்` என்னும் மான், உரி - தோல், இமையோர் - 
தேவர்கள்; சோலைப்போதில் அங்கு நசையால் வரி
வண்டு பாடும் எனப்பிரித்துப் பொருள்கொள்க. அங்கு - 
அசை; போது இலங்கு எனப் பிரித்துக் கோடலும் ஒன்று .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.